“குட் மார்னிங் தெட்டு” தன் மழலை மொழியில் இன்னும் முழுதாக கலையாத தூக்கத்துடன் கிச்சன் வந்து நின்றாள் அபூர்வா…
Thank you for reading this post, don't forget to subscribe!“குட் மார்னிங் பூர்வி… என்னாச்சு இவ்வளவு சீக்கிரம் புவிக்குட்டி எழுந்துட்டீங்க…” தென்றல் அடுப்பில் இருந்த பாலை இறக்கியபடி கேட்க
“தெட்டு… பால் காஞ்சுச்சா? “
“ஏன்டா பாப்பாக்கு பசிக்குதா? இதோ டூ மினிட்ஸ்… நான் சக்கரை கலந்து ஆத்தி கொடுக்கிறேன்…” என்று தென்றல் சொன்னபடி நாட்டுச் சர்க்கரையை ஒரு டம்ளரில் போட்டு பாலை ஊற்றிக் கொண்டு இருக்க
“தெட்டு… எனக்கு.. எனக்கு ஒரு கப்பு காப்பி வேணும்…” என்று அபூர்வா கேட்க அவளை கண் சுருக்கி பார்த்த தென்றல்
“காஃபி யா? நீ எப்பவும் பால் தானே குடிப்ப குட்டிமா?” தென்றல் கேட்க
“எனக்கு இல்ல தெட்டு… காப்பி சூப்பர் மேனுக்கு… “
“யாருடா அது? சூப்பர் மேன்.. நேத்து டீவில படம் பார்த்தியா? இல்ல குமார் மாமா புதுசா எதுவும் பொம்மை வாங்கி தந்தாரா?” தன்னோடு சேர்த்து தனக்கு பிடித்த பொம்மைக்கும் சேர்த்து அனைத்து சேவைகளையும் செய்ய வைக்கும் குழந்தைக்கே உரிய அரிய குணம் அபூர்வாவிற்கு உண்டு என்பதால் பொம்மை என்று நினைத்து தென்றல் கேட்க
“ச்ச்… இல்ல மா… ச்சூப்பர் மேன் எதிர்வீட்டுல இருக்கான்… நேத்துக்கு நேத்து நான் மயங்கி விதும் போது ஓடி வந்து என்னை பிடிச்சுட்டான்… நேத்து சைக்கி ல இருந்து வித போனேனா… அப்போவும் அவன் என்னை பிடிச்சிட்டான்…” என்று குழந்தை தனக்கே உரிய பாணியில் இழுத்து இழுத்து கதை சொல்லிக் கொண்டு இருக்க தென்றல் குழந்தைக்கு பாலும் தனக்கும் தாய்க்கும் காஃபியும் கலக்கி முடித்திட
ஒரு கோப்பையை வாங்கிக் கொண்டு எதிர்வீட்டிற்க்குள் ஓடினாள் அபூர்வா…
“ஏய் புவிக்குட்டி பாத்து பத்திரமா போ…” என்று புன்னகையோடு கூறிய தென்றல்
“பார்த்தியா ம்மா… மதன் அண்ணா அவளுக்கு சூப்பர் மேனாம்…” என்று தென்றல் சிரிக்க
“ம்க்கும் உன் மக சொன்ன சூப்பர் மேன் யாருனு தெரிஞ்சா நீ என்ன ஆட்டம் ஆடுவியோ…” என்று முணுமுணுத்துக் கொண்டார் பொன்னி.
“அம்மா… இந்தா இந்த காஃபி நீ குடி… நான் வேற போட்டுக்கிறேன்” என்று தென்றல் கோப்பையை நீட்ட
“நீ குடிச்சிட்டு ஆஃபீஸ் கிளம்பு நான் வேற போட்டுக்கிறேன்… ஆமா என்ன மா இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட?” பொன்னி கேட்க
“தெரியல ம்மா… தூக்கம் வரலை.. அம்மா இன்னைக்கு என்ன மா சமைக்க போற? இன்னைக்கு பெரிசா வேலை எதுவும் இல்ல… நான் ஆஃபிஸ்க்கு லேட்டா போனாக்கூட பரவாயில்லை… நானே இன்னைக்கு சமைக்கட்டுமா?” தென்றல் கேட்க
“சரி தென்றல்… வழக்கம் போல தான் ஃப்ரிட்ஜ் ல மாவு இருக்கு… எடுத்து வெளியே வைக்கிறேன்.. இட்லி சாம்பார் வேணும்னா தக்காளி சட்னி பண்ணிக்கலாம்…” என்று பொன்னி கூற
“அம்மா… இட்லி சட்னி சாம்பார் னு பண்ணா அபூர்வாவை சாப்பிட வைக்கிறதுக்கு நீதான் கஷ்டப்படனும்… மாவு ஃப்ரிட்ஜ் ல தானே இருக்கு… இருக்கட்டும் நைட்டு எடுத்து தோசை வார்த்துக்கலாம்… இப்போ நான் பூரி கிழங்கு பண்றேன்… புவிக்குட்டி நல்லா சாப்பிடுவா…” என்றபடி உருளைக்கிழங்கு எடுத்து வேக வைத்தாள் தென்றல்.
“ம்ஹூம்… ஒரு காலத்துல தீரா தீரா னு பைத்தியம் புடிச்சு திரிஞ்சவ இப்போ வெறுக்கிறேன் வெறுக்குறேன் னு அவன் பெயரை கூட சொல்ல விடாம விரட்டி அடிக்கிறவ அவ பொண்ணுக்கு பிடிக்கும் னு அந்த பையனுக்கு பிடிச்சதா பார்த்து பார்த்து சமைக்கிறா..” என்று தன் போக்கில் முணுமுணுப்பாக பொன்னி புலம்ப
“என்ன ம்மா… என்ன சொல்ற? சத்தமா சொல்லு…” என்று தென்றல் கேட்க
“ஆ! ஒன்னும் இல்ல தென்றல்… நீ வேலைக்கு போய் டயர்டா இருப்ப.. ஏன் இத்தனை வேலை இழுத்துக்கிற? அதோட ஆஃபிஸ் லேட்டா போனா போதும் னு சொல்ற… ஏன் மா? சம்பளம் கொடுக்குறவங்க சரியான வேலை கொடுக்கனும் னு சொல்லுவியே…?” என்று பொன்னி பேச்சை மாற்ற பூரிக்கு மாவை எடுத்தபடி
“அம்மா என்னோட வேலை எம்.டிக்கு அசிஸ் பண்றது தானே… எம்.டி வெளியூர் போயிருக்காரு. அதனால மதன் அண்ணா சொல்ற வேலையை செய்துட்டு இருக்கேன்… அண்ணாக்கு இன்னைக்கு வெளியே சைட்டுக்கு போற வேலை இருக்கு. அதனால லேட்டா தான் ஆஃபிஸ் வருவேன் னு சொல்லிட்டாரு. நேத்து கொடுத்த வேலையை ஏற்கனவே முடிச்சு வைச்சிட்டேன்…
அதான் பெரிசா வேலை எதுவும் இல்லை… அதோட காலையில இருந்து மனசு ஏதோ லேசா இருக்கு மா.. ஏதோ ரொம்ப நாள் கழிச்சு பாதுகாப்பா இருக்கிற மாதிரி தோணுது…” என்று தென்றல் சிலாகித்து கூற
‘ம்ஹூம்… ஆதீரன் மாப்ளை பக்கத்துல இருக்கிறது தான் அப்படி தோணுதோ? கடவுளே இவ அந்த புள்ளையை மனசு மாறி ஏத்துக்கனும்… அதுக்கு நீதான் வழிகாட்டனும்..’ என்று சாமி படத்தை பார்த்து வேண்டிக் கொண்டார் பொன்னி.
★★★★★★★
தென்றல் இங்கு குடிவந்த பிறகு தான் இங்கு தங்குவதை தவிர்த்து வந்த ஆதீரன் நேற்று தென்றலை தவிர மற்ற அனைவரும் தன்னை ஏற்றுக் கொண்டதன் விளைவாக மீண்டும் மதன் வீட்டில் தங்க தொடங்கி விட்டான்.
அவனுக்கு தான் காலை எழுந்ததும் முதல் வேலையாக காஃபியை வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் அபூர்வா…
வீட்டில் இரண்டு படுக்கையறை இருந்தாலும் நட்பாக பேசியபடி ஒரே அறையில் மதன் ஆதீரன் இருவரும் உறங்கி இருக்க முதலில் ஆள் இல்லாத அறைக்கு சென்ற அபூர்வா அடுத்தாக இருவரும் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு வர தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தான் மதன். அருகிலேயே ஆதீரன் இடை வரை போர்வை போர்த்தி படுத்திருப்பதை பார்த்தும் கூட காஃபியை ஓரமாக வைத்து விட்டு மதனின் போர்வையை அபூர்வா வெடுக்கென்று இழுக்க அவன் அலறிக் கொண்டு எழுந்தான் பயந்து போய்…
அந்த சத்தத்தில் ஆதீரன் எழ “குட் மார்னிங் ச்சூப்பர் மேன்…” என்று அழகாக சிரித்து நின்ற தன் மகளை விழிகளில் நிறைத்துக் கொண்டான் ஆதீரன்.
“குட்டி மா… பூர்வி குட்டி.. குட்மார்னிங் டா… நீங்க எப்படி இங்க? கதவை எப்படி திறந்தீங்க?” என்று ஆதீரன் ஆச்சரியம் கொண்டு கேட்க
“கதவு பூட்டவே இல்ல ச்சூப்பர் மேன்…” என்று சொல்லும் போது தான் பெயரை கவனித்த ஆதீரன்
“சூப்பர் மேனா? அது யாரு பூர்வி குட்டி…” என்றிட
“நீதான் ச்சூப்பர் மேன்… பறந்து பறந்து என்னை விதாம பிடிச்சிட்ட…” என்று கண்ணை உருட்டி கூறிய அழகில் தொலைந்து போன ஆதீரன் அப்படியே தூக்கி தன் மடியில் இருத்திக் கொண்டான் தன் மகளை..
“ஆமா இவ்வளவு காலையில எதுக்கு குட்டி இப்படி தேடி வந்தீங்க?” என்று ஆதீரன் கேட்கவே தான் வந்த வேலை மறந்து போனதை எண்ணி தலையில் அடித்து கொண்டாள் அபூர்வா.
“என்னாச்சு குட்டிமா?” அவள் பாவத்தில் சிரிப்பு வர கேட்க
“உனக்கு காப்பி கொட்டு வந்தேன் ச்சூப்பர் மேன்… மதந்துட்டேன் ( மறந்துட்டேன்)” என்று அபூர்வா கூற “ஐ.. காஃபி” என்று எடுத்து வாயில் வைக்கப் போன மதன் கையில் அவள் பலத்தை கொண்டு அடித்தாள் அபூர்வா..
“பாப்பா… ஏன்டா? காஃபி தானே குடிக்க போனேன்…” மதன் பாவமாக சொல்ல
“இது ச்சூப்பர் மேனுக்கு… உனக்கு வேணும்னா நீயே போத்துக்கோ…” என்று சிறு முறைப்புடன் கோபமாக சீறினாள் அபூர்வா.
அவன் கையில் இருந்த கோப்பையை ஆதீரன் கையில் தரச்சொல்லிய அபூர்வா “ச்சூப்பர் மேன்… இன்னைக்கு தெட்டு தான் காப்பி போட்டா… ச்சூப்பரா இக்கும்.. குடி…” என்று சொல்ல தென்றல் கையால் போடப்பட்ட காஃபி.. தீரனை பொறுத்தவரை அமிர்தம் அல்லவா? எத்தனை ஆண்டுகள் ஆனது அவள் கையால் ஒரு டம்ளர் காஃபி கலந்து கொடுத்து…
காதலித்த காலத்தில் அவள் போட்டு தரும் காஃபியில் தான் இவனின் பொழுது விடியும்… ஆசையாக சொட்டு விடாமல் குடித்து முடித்தான் ஆதீரன்.
“ச்சூப்பர் மேன்… தெட்டு ச்சூப்பரா சமைப்பா.. உனக்கும் சேத்து நான் கொட்டு வரேன்…” என்று கூறிய அபூர்வா தான் பால் குடித்த உடனேயே தன் உதட்டை தாய் தென்றல் கையால் துடைப்பது போல பிஞ்சுக் கரம் கொண்டு ஆதீரனின் மீசையில் இருந்த காஃபி துளிகளை துடைத்து விட தன் மகள் பாசம் கண்டு மெய் சிலிர்த்தான் ஆதீரன்.
“சரி நான் எக்க வீடு போறேன்…” என்று டம்ளரை எடுத்துக் கொண்டு அபூர்வா கிளம்ப இடை மறித்தான் மதன்.
“பாப்பா… பாஸூக்கு மட்டும் காஃபி கொடுத்த ஓகே… அட்லீஸ்ட் டிஃபனாவது எனக்கும் சேர்த்து கிடைக்குமா?” என்று மதன் கெஞ்சலாக கேட்க அவனை ஏற இறங்க பார்த்து முறைத்து விட்டு ஓடி விட்டாள் அபூர்வா.
வீட்டில் தென்றல் பூரி சுட்டு அடுக்க “ஐ… பூரி..” ஆசையாக கூறிக் கொண்டு வந்த அபூர்வா “அம்மா அம்மா… ச்சூப்பர் மேனுக்கு பூரி தரலாமா? அப்பறம் கூட இருக்க மாமாவும் பூரி கேட்டுச்சு…” என்று கூற
“அம்மா… என்ன சொல்றா இவ? மதன் அண்ணாக்கு காஃபி கொண்டு போனா… இப்போ பூரி கொடுக்கலாம் னு சொல்றா சரி… ஆனா கூட இருக்க மாமா கேட்டதா சொல்றா… அண்ணன் மட்டும் தானே அந்த ஃப்ளாட் ல இருந்தாங்க?” தென்றல் சந்தேகமாக கேட்க பொன்னிக்கு விலுக்கென்றது உள்ளுக்குள்…
“அது.. அது வந்து மா…. அந்த தம்பியோட ஃப்ரண்ட் அப்பப்போ கூட வந்து தங்கிப்பாராம்.. அவர் தான் நேத்து தான் அந்த தம்பியை பார்க்க வந்தாரு. நம்ம குமாரு அந்த நேரத்துக்கு வீட்ல இருந்தானா… அதனால ரெண்டு பேர் கூடவும் பேசிட்டே சாப்பிட கூப்பிட்டு வந்தான். நேத்து மதியம் கூட அந்த ரெண்டு தம்பிங்களும் நம்ம வீட்ல தான் சாப்பிட்டாங்க..” என்று ஒருவாறு பூசி மொழுகி பொன்னி கூறி முடிக்க
“ஓ.. அப்படியா? சரி ம்மா… நீயே அவங்க ரெண்டு பேருக்கும் எடுத்திட்டு போய் கொடுத்திட்டு வந்திடு… எனக்கு டைம் ஆச்சு நான் போய் ஆஃபிஸ் கிளம்பி வரேன்” என்று அறைக்குள் தென்றல் செல்ல ஆசுவாசமாக மூச்சு விட்டுக் கொண்டார் பொன்னி.
தென்றல் சாப்பிட அமர “புவிக்குட்டி நீயும் சாப்பிடு அம்மா ஊட்டி விடவா?” தென்றல் கேட்க
“இல்ல… நான் ச்சூப்பர் மேன் கூட சாப்பிடுக்கிறேன்…” என்று குழந்தை சொல்ல
“பாப்பா அவங்க கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன் னு சொன்னாங்க நீ சாப்பிடு… நீ சாப்பிட்டு அம்மா ஆஃபிஸ் போனதும் நாம ரெண்டு பேரும் போய் அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கலாம்” என்று பொன்னி கூற
“இல்ல… நான் ச்சூப்பர் மேன் கூட தான் சாப்பிடுவேன்…” என்று அபூர்வா அடம் பிடிக்க
“அம்மா… நான் சாப்பிட்டு கிளம்பிக்கிறேன்… நீ இவளையும் அங்க கூட்டிட்டு போய் அவங்க ரெண்டு பேருக்கும் டிஃபன் கொடு…” தென்றல் சொல்ல தென்றல் தன் கையால் செய்த உணவுகளை எடுத்துக் கொண்டு சென்று ஆதீரனுக்கு பரிமாறினார் பொன்னி.
மதன் தட்டில் பூரியை பார்த்ததும் சாப்பிடுவதே தன் கடமை என்று அந்த வேலையை பார்க்க ஆதீரன் இன்னும் நம்பாமல் இருந்தான்.. தன் தென்றலின் கையால் சமைத்த அதுவும் தனக்கு பிடித்த உணவுகள்… என்ற நினைவே வயிற்றை விட மனதை நிறைத்திருந்தது..
அபூர்வாவை தன் மடியில் வைத்து அவளுக்கு முதலில் ஊட்டி விட அபூர்வா “நீ சாப்பிடு ச்சூப்பர் மேன்…” என்று ஊட்டி இருந்தாள் ஆதீரனின் சின்னத்தாய் அவள்…
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️