Skip to content
Home » தெரிந்துசெயல்வகை-47

தெரிந்துசெயல்வகை-47

பொருட்பால் | அரசியல் |தெரிந்துசெயல்வகை

குறள்:461

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

ஒரு செயலைத்‌ தொடங்குமுன்‌ அதனால்‌ அழிவதையும்‌, அழிந்தபின்‌ ஆவதையும்‌, பின்பு உண்டாகும்‌ ஊதியத்தையும்‌ ஆராய்ந்து செய்ய வேண்டும்‌.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

குறள்:462

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன்‌ (செயலைப்பற்றி) நன்றாகத்‌ தேர்ந்து, தாமும்‌ எண்ணிப்‌ பார்த்துச்‌ செய்கின்றவர்க்கு அரிய பொருள்‌ ஒன்றும்‌ இல்லை.

குறள்:463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்

பின்‌ விளையும்‌ ஊதியத்தைக்‌ கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக்‌ காரணமான செயலை அறிவுடையவர்‌ மேற்கொள்ளமாட்டார்‌.

குறள்:464

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்

இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர்‌ ( இன்ன ஊதியம்‌ பயக்கும்‌ என்னும்‌) தெளிவு இல்லாத செயலைத்‌ தொடங்கமாட்டார்‌.

குறள்:465

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

செயலின்‌ வகைகளை எல்லாம்‌ முற்ற எண்ணாமல்‌ செய்யத்‌ தொடங்குதல்‌ பகைவரை வளரும்‌ பாத்தியில்‌ நிலைபெறச்‌ செய்வதொரு வழியாகும்‌.

குறள்:466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

ஒருவன்‌ செய்யத்தகாத செயல்களைச்‌ செய்வதனால்‌ கெடுவான்‌; செய்யத்தக்க செயல்களைச்‌ செய்யாமல்‌ விடுவதனாலும்‌ கெடுவான்‌.

குறள்:467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

செய்யத்‌ தகுந்த செயலையும்‌ வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும்‌. துணிந்தபின்‌ எண்ணிப்‌ பார்க்கலாம்‌ என்பது குற்றமாகும்‌.

குறள்:468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

தக்கவழியில்‌ செய்யப்படாத முயற்சி பலர்‌ துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும்‌ குறையாகி விடும்‌.

குறள்:469

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப்‌ பொருந்துமாறு செய்யாவிட்டால்‌ நன்மை செய்வதிலும்‌ தவறு உண்டாகும்‌.

குறள்:470

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு

தம்‌ நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம்‌ ஏற்றுக்‌ கொள்ளாது. ஆகையால்‌ உலகம்‌ இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!