திருக்குறள்
Thank you for reading this post, don't forget to subscribe!அறத்துபால் -இல்லறவியல்–நடுவு நிலைமை
குறள்-111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
குறள்-112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
குறள்-113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
குறள்-114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
குறள்-115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
குறள்-116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்
தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், “நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.
குறள்-117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.
குறள்-118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
குறள்-119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல் நடுவுநிலைமையாம்.
குறள்-120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.