Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-9

மனதில் விழுந்த விதையே-9

அத்தியாயம்-9

Thank you for reading this post, don't forget to subscribe!

   சாக்ஷி வேதாந்த் போலீஸை கண்டு நிதானமாய் நின்றனர்.
   “யோவ் ஆம்பளைங்களை விடு. இரண்டு இரண்டு பொண்ணுங்களா வந்தா பிடிச்சி நிறுத்துயா? என்று போலீஸ் டிராபிக் ஆவதால் பெண்களை மட்டும் கண்காணிக்க வலியுறுத்தினார்.

   “அப்ப நியூ மேரிட் லவ்வர்ஸை விட்டுடலாமா? சார்?” என்று கேட்க, டீயை குடித்தபடி பஜ்ஜியை விழுங்கிய போலீஸ் திரும்பாமலேயே போக சொல்லி அனுமதி தந்தார்.

   சாக்ஷி வேதாந்த் இருவருக்கு முன்னே இருந்த புதுமண தம்பதிகள் காதலர்கள் என்று வண்டியில் கலைந்து போக, சாக்ஷியையும் வேதாந்தும் காதலர்கள் அல்லது தம்பதிகளென்று விடுவித்தார்கள்.

  அவனும் சட்டென மின்னலாய் வண்டியை இயக்கி அவ்விடம் விட்டு புறப்பட்டான்.
  
  சற்று தள்ளி வந்ததும் தான் சீரான மூச்சை வெளியிட்டு, “முட்டாள் பசங்க… ஸ்கூட்டில வர்ற இரண்டு இரண்டு கேர்ஸையும் கார்ல நாலு கேர்ள்ஸையும் தேடறாங்க.” என்று பேச, ”அதானே.. ஜோடியா போனா லவ்வர்ஸாம்?” என்று சிரிக்க, வேதாந்தோ ‘லவ்வர்ஸ்’ என்று உதட்டசைத்து மலர்ந்த முகமாய் வண்டியை நிறுத்தினான்.

     “சோளம் சாப்பிடறியா?” என்று தள்ளுவண்டியில் தீப்பொறி பறக்க மக்காசோளம் சுட்டுக் கொண்டிருப்பதை காட்டி கேட்டான்.

   “இதெல்லாம் கேட்க கூடாது. வாங்கி தரணும்” என்று அமர்த்தலாய் கூறியிறங்கினாள்.

    மக்காசோளம் வாங்கி விட்டு பணத்தை பேக்கெட்டில் வைக்க, “உங்களுக்கு?” என்றதும் மறுத்தான்.

     “வேர்கடலை?” என்றதும் தான் அவள் இரண்டையும் வாங்கியதை கண்டான்.

  அவள் வாங்கியப் பின்னும் சுவைக்காமல் இருக்க “சாப்பிடலையா?” என்று கேட்டான்.

  “பிரெண்ட்ஸை விட்டு எப்படிப்பா சாப்பிட.?” என்று மொழிந்தாள்.

    அவளை ஆச்சரியமாக பார்த்தவன் ஹெல்மெட் அணிந்து வண்டியை இயக்கினான்.

  வழிநெடுக இயற்கை அழகை ரசித்தாள்.

   “தினமும் ஒரு இடத்துக்கு போகலாம்னு பிளான் எல்லாம் போட்டோம். இப்படி கார்ல இருந்து இறங்கறதுக்கு முன்னயே சஹானாவோட ரிலேட்டிவ் வீட்டில் போலீஸ் ரெடியா இருப்பாங்கனு கனவுலயும் நினைக்கலை.
   
   நீங்க உங்க பிரெண்ட்ஸ் இல்லைனா கஷ்டம் தான். மிருதுளா மாட்டிருப்பா.” என்றதும், வேதாந்த் செருமிக்கொண்டான்.

  “சென்னையிலயிருந்து கார்ல ஏறும் போதே அம்ரிஷ் முகம் செத்துடுச்சு. அந்தளவு ரொம்ப அப்சட். பட் கெட்டதுலயும் நல்லதுனு சொல்வாங்களே.. அது மாதிரி தான். உங்களை சந்திச்சதும் முட்டி மோதி சண்டைப்போட்டு வாக்குவாதம் செய்து அவன் நார்மலா இருக்கான்.
  
     இல்லைனா தனியா விடுங்கடானு ரூம்ல அடைந்துகிடப்பான்.

    இங்க வர்றதுக்கு முன்ன அவனை சமாதானம் செய்யறது கஷ்டம்னு நினைச்சோம். இப்ப இஷா பேட்டியை பார்த்தும் பெரிசா ரியாக்ட் பண்ணலை.” என்று கூறினான்.
  
   சாக்ஷியோ “ரியாக்ட் பண்ணலைனு முடிவு பண்ணிட முடியாது. அவருக்கு இதான் சொல்லப்போறாங்கனு முன்னவே தெரியும். மானத்தை ஏலமிடப்போறாங்க அதனால மனசுல ப்ரிப்பர் ஆகிட்டார். பேட்டி பார்க்கறப்ப கோபம் இருந்தாலும் இப்ப அவர் பெரிசா பாதிப்பை அடைந்ததா காட்டிக்கலை.

   சீக்கிரமா இதுக்கு பதிலடி தருவார். தந்தா தான் மாஸா இருக்கும்.” என்று வேதாந்திற்கு ஆறுதலாய் அம்ரிஷிற்கு ஆதரவாய் பேசியவளை கண்டு முறுவலித்தான்.

   “ஆமா… கேட்கணும்னு நினைச்சேன். டான்ஸர்னு சொன்னிங்க? வேற தகவல் இல்லையா?” என்றதும் உதட்டு கோணித்து கூறவேண்டுமா என்று சோர்வடைந்தாள்.

  ஆனாலும் வேகத்தடையில் அவன் தோளில் கையை பதித்ததில் நட்பான எண்ணம் உதிக்க, “புரசைவாக்கம்ல ‘ஆதவ நாட்டிய பள்ளி’ கேள்விப்பட்டிருக்கிங்களா? அங்க பரதம் வெஸ்டர்ன் இரண்டும் சொல்லித்தர்றேன். ஒரு ஐம்பது எழுபது ஸ்டூடண்ட் டைம் ஷட்டூல் பண்ணி மார்னிங் ஈவினிங் என்று வரச்சொல்லிடுவேன். இந்த மந்த் லாங்க் லீவு சொல்லிட்டு வந்திருக்கேன்.
       மிருதுளாவுக்காக.” என்றதும் வண்டி அவர்கள் இருந்த இடத்திற்கு திரும்பியது.

    லேசான பனிமூட்டம் அதற்குள் சூழ்ந்திருந்தது.
    
  இவர்கள் இருவரும் வந்தவுடன் தான் மிருதுளா, மென்பனி, சஹானாவிற்கே உயிர் திரும்பியது.

    மிருதுளா சாக்ஷியை கட்டி அணைத்து இருக்கவும், “எல்லார் வீட்டுக்கும் போன்ல தகவல் சொல்லலை. மெயில்ல அனுப்பியிருக்கேன்.” என்று கூற “மெயில்ல சொல்லணும்னு அவசியமில்லை சாக்ஷி எல்லாருக்கும் நம்ம நட்பு நல்லாவே தெரியும்.
   ஒன்னு அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிப்பாங்க. இல்லையா இதுங்க எங்கயோ ஒளிஞ்சியிருக்கும்னு அறிவா அவங்க எஸ்ஸாயிடுவாங்க. இத்தனை வருட அனுபவம். நம்மளை பத்தி தெரியாதா?” என்று சஹானா எதையோ திண்று கொண்டே பேசினாள்.

   “கரெக்ட் அப்ப எதுக்கு அவ போகறப்ப வேடிக்கை பார்த்த. எதுக்கும் தெளிவுப்படுத்திட வேண்டும்ல” என்று மென்பனி கூறவும் ஆமோதித்தனர்.

  பின்னர் அதிகப்படியான குளிரென்று வீட்டுக்குள் வந்து அறைக்கு அடைந்தார்கள். 
 
   சாக்ஷியோ வேதாந்தை திரும்பி பார்த்து கடக்க, இருவருக்குள் சிறு நட்புரசல் உருவாகியது.

   அன்றைய இரவு மாறி மாறி கேலியும் கிண்டலுமாய் பேசினார்கள். பணியாட்கள் உணவை சமைத்து கொடுத்து அவுட்ஹவுஸிற்கு சென்று விட்டார்கள்.

   அம்ரிஷ் ஆக்டர் என்பதால் அப்படியொன்றும் பழகுவதை தவிர்க்கவில்லை. காரிலிருந்த போது சிடுசிடுத்தவனுக்கு கொடைக்கானலில் என்ன உற்சாகமோ, தன் மாபெறும் கஷ்டத்தை ஒதுக்கி வைத்து மகிழ்ந்தான்.

  அவனே தன்நிலையை மறந்து சகஜமாக இருக்க, மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

   பெண்களுமே தங்கள் தப்பித்த விதத்தை எண்ணி மகிழ்ந்தார்கள். ராஜபாண்டியன் அரசியல் அறிக்கை போல பேச்சு தான் இருக்கும். எப்படியும் மிருதுளாவை தேடி சலிப்படைவானென்று நகைத்தார்கள்.

    இப்படியே பேசி பேசி ஆளாளுக்கு உறங்க செல்லவும் பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் உறங்க சென்றார்கள்.

  புது இடமென்று தாழ்பாளிட்டு பெண்கள் கவனமாக தான் இருந்தார்கள்.

  அப்பொழுது தான் மெதுவாக பூட்டிய கதவு திறந்தது.
   வேதாந்த் தமிழ் இருவரும் உதட்டில் கைவைத்து “சைலண்ட்டா வாடா. சொதப்பிடாதே.” என்று கூறி சாக்ஷியை பிடித்து கொள்ள, சாக்ஷி திமிரவும் ஆதேஷ் கண்ணை கட்டினான்.

  “கீழே போட்டுடாம தூக்கிட்டு வாடா” என்ற அம்ரிஷ் கூறவும் வேதாந்த் “பஞ்சு மாதிரி இருக்காங்க. கீழே போடுவேனா?” என்று கிசுகிசுக்க, “என் பிரெண்ட் பஞ்சு மாதிரி இருங்காளா? ஹலோ டாக்டர் என் பிரெண்டை கீழே இறக்குங்க” என்று சஹானா அதட்டினாள்.

   “ஏங்க பொண்ணுங்க வெயிட் இல்லாம லைட்டா இருக்கறதை பஞ்சு மாதிரினு சொல்லிட்டான். இதுல என்ன தப்பு? சும்மா சண்டைப்போடாதிங்க. பத்து நாளைக்கு மேல எங்களோட தான் குப்பை கொட்டணும்” என்றான் ஆதேஷ். அதில் தன் தவறையும் உணர்ந்து நின்றாள் சஹானா.
 
   மென்பனியோ “சும்மாயிரு சஹானா” என்று அதட்டியவள் சாக்ஷியை நிறுத்தியதும், “சாக்ஷியோ கத்தாமல் சுகமாய் தூக்கி வந்தவன் கைவளைவில் கட்டுண்டாள்.
 
   “ஏய் என் பெர்த்டே கேக் இருக்கா டி” என்று துள்ளவும், “பார்டா நாலு பசங்க இருக்கற இடம். ஒருத்தன் கையில தூக்கிட்டு போறான். பயமில்லாமா பெர்த்டே கேக் கேட்கறிங்க” என்று வேதாந்த் பெண்ணவளை இறக்கி விட்டான்.

    சாக்ஷிக்கு இன்று பிறந்தநாள் வீட்டிலிருந்து கிளம்பும் போதே பெற்றோர் வாங்கி வைத்த மோதிரமும் பிரேஸ்லெட்டும் அணிந்துவிட்டாள்.

  தோழிகள் எப்பொழுதும் கேக் எடுத்து வந்து இரவு வெட்டுவது வழக்கம். அடுத்த நாள் முழுக்க நால்வரும் ஊர்ச்சுற்றுவது தான்.

   “அட எல்லா வருடமும் தூங்காம இருப்போம். விடிய விடிய பேசி கேக் கட் பண்ணி ரகளை பண்ணறது தான். இன்னிக்கு சூழ்நிலை செலிபிரேட் கேக் இருக்காதுனு பார்த்தேன்.
   ஆனா” என்றவள் வேதாந்த் கைகளால் தூக்கப்பட்டதில் வார்த்தையை விழுங்கினாள்.

    “ஆனா என்ன கேக் கட் பண்ணுடி. டிசைன் டிசைனா பிராப்ளம்ஸ் வில் கம் அண்ட் கோ. கொஞ்சம் சில் பண்ணு மாப்பி'” என்று மென்பனி பாட, கூடவே சஹானாவும் பாடியபடி சாக்ஷியை வட்டமிட்டாள்.

   கூடவே மிருதுளாவை இழுத்து கொள்ளவும் தவறவில்லை.

   “கேக் கட் பண்ணுங்க சாக்ஷி” என்றதும் சாக்ஷி அவசரமாய் சிகையை முன்னுக்கு இழுத்துவிட்டு மெழுகை ஊதி அணைத்தாள்.

   ஆண்கள் எல்லாம் கைத்தட்டி பிறந்த நாள் பாடலை பாட, கேக் மிருதுளாவுக்கும் மென்பனி சஹானாவுக்கு ஊட்டிவிட்டாள்.

  மடமடவென் ஆண்களுக்கும் கட் செய்ததை நீட்டவும் அம்ரிஷ், “தேங்க்ஸ்” என்று பெற்றுக் கொண்டான்.

  வேதாந்தோ “மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே” என்று கைக்குலுக்கினான்.

   தமிழோ தமிழில் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தான்.

  ஆதேஷோ ”போலீஸ் பிடிச்சி அடைச்சி உங்க வீட்டுக்கு அனுப்பாம அந்த அரசியல்வாதி கட்டிப்போட்டு வச்சிருந்து டார்ச்சர் பண்ணி களி திண்ண வேண்டியது. பாருங்க.. கூலா கேக் சாப்பிடறிங்க. நேரம் தான்” என்று கேக்கை நக்கி திண்ணும் நேரம் பெண்கள் ஆளாளுக்கு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கண் சிமிட்டினார்கள்.
 
  அடுத்த நொடி ஆதேஷ் முகம் கேக்கால் மொழுவப்பட்டது.

   மூன்று பெண்களும் கைகளில் இருந்த கேக் மிச்சத்தை எடுத்து பூசவும் முதலில் திகைத்தாலும் பின்னர் “ஏய் ஏய்.. அச்சோ.. உங்களிடம் வச்சிக்கவே கூடாது” என்று பின்னடைந்தான் ஆதேஷ்.
  
  தமிழும் வேதாந்தும் தேவை தான் என்பது போல வேடிக்கை பார்த்தனர். அம்ரிஷோ மனம் விட்டு சிரித்தான்.

     நண்பனின் துன்பத்தில் பகிர்ந்து கொள்ள வந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்கள்.

   “என் பேஸுக்கு பேஸியல் பண்ணியது போதும். பாட்டு டான்ஸ், எதுவும் இல்லையா? ஒருத்தர் டான்ஸர் ஒருத்தர் பாடறவங்க.” என்று எடுத்து கொடுத்தான்.

   “யா டான்ஸ் ஆடுங்களேன்.” என்று வேதாந்த் ஆசையாக சாக்ஷியிடம் வேண்டுதல் வைத்தான்.

     ஆதேஷோ “பாட்டு வருமா? இல்லை ஊரை ஏமாத்தறியா?” என்று புருவம் ஏற்றி சஹானாவை வம்பிழுக்க, அவளுமே “யூ” என்று பாடலோடு ஆடவும் வந்தாள்.

  மிருதுளா நிலைக்கு ஆடவோ பாடவோ மறுத்திட மூவரும் நைட் சூட்டில் ஆடினார்கள்.

“எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது.
தீப்பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது

மேகத்தின் தீயணைக்க
வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா..
தாளிசை நான் பாடவா..

எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது.
தீபட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது

மேகத்தின் தீயணைக்க
வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா..
தாளிசை நான் பாடவா.” என்று பாடியபடி ஆடவும் ஆதேஷ் பங்கமாய் சிரித்து விட்டான்.

   பெண்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு இடுப்பில் கைவைக்க, டிசு பேப்பரால் முகத்தில் வழிந்த கேக்கை துடைத்தவன் “ஜெயிலர் படத்துல வர்ற வில்லன் ஆடியது மாதிரி அழகா ஆடறிங்க.” என்று சிரிக்கவும் மாறி மாறி அவனை அடிக்க பெண்கள் துரத்தவும், ஆதேஷ் ஓடவும், தோழனை காப்பாற்ற தமிழும் வேதாந்தும் குறுக்கே வர அவர்களையும் மொத்தியபடி விளையாடியதில், அன்றிரவு வேடிக்கையாக தான் இருந்தது.

   இந்த இரண்டு நாள் பழக்கம் இந்தளவு மகிழ்வை தருமென்று கனவிலும் நினைக்கவில்லை.

   அம்ரிஷும் மகிழ்ச்சியாக பார்த்திருக்க, மிருதுளா அருகே வந்து, “சாரி உங்களுக்கு இருக்கற கஷ்டத்துக்கு, இவளுங்க வேற எப்பவும் போல ஆடறாளுங்க. ஆனா நாங்க இங்கிதம் தெரியாதவங்கயில்லை. எங்களோட கேங்கே இப்படி தான். சட்டுனு கவலையை மாத்தணும். அவ்ளோ தான். பிரச்சனை இருந்தா அதற்கான தீர்வும் இருக்கும். தீர்வு எப்ப வருதோ அப்ப பார்ப்போம்னு ஸ்கிப் பண்ணிட்டு லைப்பை பார்க்கறவங்க.   
   அதனால தான் இந்த ரணகளத்துலயும் ஆட்டம் போட முடியும். இந்த குரூப்லயே நான் தான் சிடுமூஞ்சி.” என்று பேசினாள்.

   அம்ரிஷோ, “அட இது நல்லாயிருக்கு. நான் ஆக்டர் என்றதால ஒதுங்கி கிசுகிசுத்து பிரச்சனையை பெருசாக்காம, என்னோட என் பிரெண்ட்ஸோட நல்ல நட்பை உருவாக்கறது. ரியலி இந்த மாதிரி தோழிகள் ஆவ்சம்.
   நான் சந்தோஷமா இருக்கேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

  ஆமா நீ சிடுமூஞ்சினு யார் சொன்னா. பிரச்சனைனா ஒதுங்கற. ஆட்டம் பாட்டத்தை ரசிக்கற ஆனா கலந்துக்க மாட்டேங்குற. அவ்ளோ தான். அவங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தறாங்க. நீ உள்ளுக்குள்ள அதை வெளிப்படுத்திக்கற.
  
   என்னடா, சோஷியல் மீடியா பக்கம் போனா தலைவலிக்குமே, இந்த நாட்களை எப்படி கடத்துவேன்னு நினைச்சேன். ஆனா பிரச்சனையை ஈஸியா சமாளிக்க முடியுமோ என்னவோ சந்தோஷமா இருப்பேன்” என்று உரைத்தவனின் வார்த்தையில் அத்தனை நம்பிக்கை படர்ந்தது.
  
    இரவெல்லாம் “பயர் பிளேஸில்’ நெருப்பு எரிய, அங்கே ஆளாளுக்கு மாறி மாறி தனிதனியாக ஆடிபாடி நடனமிட நேரங்கள் கழிந்தது. தனித்தனி அறையில் உறங்குவதற்கு பதிலாக எட்டு பேரும் அங்கே தான் உறங்கி வழிந்தனர்.

-தொடரும்.
Praveena Thangaraj

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *