Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10

பூஜாவின் திருமணத்தை நேரில் பார்த்த கண்ணன் செய்வதறியாமல், நடப்பது எதுவுமே புரியாமல் தன்னுடைய வீட்டில் கூட சொல்லாமல், பெங்களூர் கிளம்பினான்.

Thank you for reading this post, don't forget to subscribe!

ஜமுனாவிற்கு பூஜாவின் திருமண விஷயம் தெரியாது என்பதால், எப்பொழுதும் போல தன்னுடைய அலுவலகத்திற்கு தன்னுடைய ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்தாள்.

அப்பொழுது எதிர்ச்சியாக தன்னுடைய இடது பக்கம் திரும்பவே, அங்கே இருந்த ஒரு சாலையோர டீக்கடையில் செழியன் டீ குடித்துக் கொண்டிருந்தான்.

செழியனை பார்த்ததும் இது அவன் தான் என்பதை கண்டுபிடித்து விட்டாள். ஏனெனில் பூர்ணாவுடனான அவனின் திருமணம் நின்று போன சமயத்தில் அவனின் வலியான  முக அசைவுகள் ஒவ்வொன்றும் அவளின் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்திருந்தது.

ஒரு நொடி கூட யோசிக்காதவள் தன்னுடைய வண்டியை அவன் முன்பு நிறுத்தினாள்.

செழியனோஎதுவும் புரியாமல் “கொஞ்சம் கூட இந்த பொண்ணுக்கு அறிவே இல்ல. ஆறடி மனுஷன் நிக்கிறது கூட தெரியாம, என்னை இடிக்கிற மாதிரியே வந்து வண்டிய நிறுத்துது” என்று தன் மனதில் அவளை திட்டிக் கொண்டான்.

“நீங்க செழியன் தானே?” என்று அவனிடம் கேட்டாள்.

பூஜா தன் அக்காவின் திருமண பத்திரிக்கையை ஜமுனாவிடம் கொடுத்த பொழுது கூட, அவள் அந்த பத்திரிக்கையை சரியாக பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் திருமணம் நின்று போன பிறகு அந்த பத்திரிக்கையை கிட்டத்தட்ட நூறு முறையாவது பார்த்திருப்பாள்.

முதல் முறை அவனின் பெயரை அறிந்து கொள்ள அந்த பத்திரிக்கையை தேடி பிடித்து எடுத்து பார்த்தாள். அதன் பின்பு அவன் முகத்தை நினைவுபடுத்திக் கொள்ளவே அந்த பத்திரிக்கையை 100 முறை பார்த்திருப்பாள்.

ஏனோ அவனின் அந்த ஏமாற்றம் அடைந்த  முகம் அவள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அவள் தன் பெயரை சரியாக சொல்வதை கேட்டு குழம்பியவளோ “ஆமா… நீங்க யாரு…?” என்று கேட்டான்.

“நான் பூஜா……”  என்று உண்மையை சொல்ல வந்தவளோ “இப்போ பூஜாவை பத்தி சொன்னா ஒன்னு அவருக்கு பூர்ணா ஞாபகம் வந்து ரொம்ப வருத்தபடுவாரு.  அப்படி இல்லன்னா பூர்ணாவுக்கு தெரிஞ்சவங்கன்னு  என் மேல கோபப்பட்டு வெறுத்து ஒதுக்கவும் வாய்ப்பிருக்கு. அதனால இப்போதைக்கு பூஜாவோட பிரண்ட்ன்னு சொல்லி நாம் அவர் கிட்ட அறிமுகம் ஆக வேண்டாம்”. என்று தன் மனதில் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் அமைதியாகவே நிற்பதை பார்த்தவன்  “உங்களை தாங்க கேட்கிறேன். யாரு நீங்க? என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டான்.

“இப்ப வேற என்ன சொல்றதுன்னு தெரியலையே… எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குது….” என்று தன் மனதில் யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு ஒரு ஐடியா வந்தது.

“இல்ல…. உங்கள பேஸ்புக்ல பார்த்து இருக்கேன்… நிறைய முறை உங்களோட facebook ஐடி எனக்கு காட்டிட்டே இருக்கும். அதுல உங்க போட்டோ உங்க பேரு எனக்கு அடிக்கடி காட்டுறதுனால உங்களோட பேஸ் எனக்கு நல்லாவே ஞாபகம் இருந்தது. அதனாலதான் உங்களை பார்த்த உடனே கண்டுபிடிச்சிட்டேன்” என்று எதையோ சொல்லி சமாளித்தாள்.

“இந்த பொண்ணு உண்மையைத் தான் சொல்லுதா? பேஸ்புக்ல பார்த்த பையனை நேர்ல பார்த்ததும், எப்படி ஒரு பொண்ணுக்கு அவளாவே வந்து பேச தோணும்?” என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு சரி என்பது போல தலையை மட்டும் அசைத்தான்.

“நம்பிட்டாரான்னு தெரியலையே….”   என்ற நினைத்தபடியே அவன் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஜமுனா.

அடுத்து பேசுவதற்கு எதுவும் இல்லாதவனோ அமைதியாகவே நிற்க “நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற அவள் அடுத்த கேள்வியை கேட்டாள்.

“அது தான் பேஸ்புக்ல என்னை பார்த்தேன்ன்னு சொன்னீங்களே… அதுலேயே என்னோட கம்பெனி நேம் எல்லாம் போட்டு இருப்பேனே. இப்போ ஏதோ தெரியாத மாதிரி கேக்குறீங்க”  என்ற அவன் சரியான கேள்வி கேட்க

“நம்ம ஆளு நல்லா விவரமா தான் இருக்காரு. இவரு கிட்ட இப்போ என்ன சொல்றது…. பூஜா என்கிட்ட மாப்பிள்ளையும் ஐ.டில வேலை செய்றதா தான சொன்னா? அப்போ இந்த ஐடியாவை ஒர்க்கவுட் பண்ணி பார்க்கலாமா?” என்று தன் மனதில் நினைத்தவள்

“இல்லங்க… நானும் ஐ.டில தான் வேலை செய்றேன். இப்போ வேற கம்பெனி மாறலாம்ன்னு இருக்கேன். அதனால தான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன். உங்க கம்பெனியில் எதுவும் வேக்கன்சி இருந்தா சொல்றீங்களா? நான் அப்ளை பண்ணி வைக்கிறேன்” என்று சொன்னாள். .

அவள் சொல்வதை பொறுமையாக கேட்டவன் “அதுதான பார்த்தேன். பொண்ணுங்க  காரியம் இல்லாம எங்க கிட்ட வாண்ட்டடா வந்து பேச மாட்டீங்களே”  என்று தன் மனதில் நினைத்துக் கொண்டவன் “எனக்கு தெரிஞ்சு இப்போ எங்க கம்பெனியில் ஹையர் பண்ணல. பண்ணுனா சொல்றேன்” என்ற அவளுடனான உரையாடலை முடிப்பதிலேயே குறியாக இருந்தான்.

“நீங்க இப்படித்தான் சொல்லுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.  நீங்க எந்த பக்கம் பால் போட்டாலும் நாங்க சிக்சர் அடிப்போம். இதோ அடுத்த பிளானுக்கு வரேன்” என்ற  மனதில் நினைத்துக் கொண்டவளோ தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்து மொபைலை வெளியே எடுத்தாள்.

தன்னுடைய போனில் லாக்கை ஓப்பன் செய்தபடியே “ஓகே செழியன்… உங்க நம்பர் குடுங்க. நான் உங்களுக்கு கால் பண்றேன். என்ற நம்பரை சேவ் பண்ணிக்கோங்க. உங்க கம்பெனில எதாவது வேக்கன்ஸி இருந்தா எனக்கு மறக்காம கால் பண்ணி சொல்லுங்க. ஓகேவா?” என்று சொன்னபடியே அவனின்  நம்பரை கேட்டாள்.

“என்னது…. இந்த பொண்ணு இவ்ளோ சீக்கிரம் நம்பர் கேக்குது. எதுவுமே புரியலையே…  இந்த பொண்ணு சொல்றது எல்லாம் உண்மைதானா? இல்ல, இது வேற ஏதாவது பணம் பறிக்கிற கும்பலா இருக்குமா? எதுவும் புரியலையே” என்றபடியே சந்தேகமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் திருத்திருவென விழிப்பதை பார்த்தவளோ “என்ன ஏதோ பணம் படிக்கிற கும்பல்ன்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப எல்லாம் பயப்படாதீங்க பாஸ்… பயம் உங்க முகத்துல அப்பட்டமா தெரியுது.”  என்று நக்கலாக சொல்லியவள் சத்தமாக சிரித்து விட்டாள்.

அவள் தன்னை கிண்டல் செய்து சிரித்ததில் அவனின் இமேஜ்  டேமேஜ் ஆகியது. அவனும் என்ன செய்வது என்று தெரியாமல் “இப்போ உனக்கு என்னம்மா வேணும்?” என்று பாவமாய் கேட்டான்.

“இல்ல…. எனக்கு ஒரு வேலை வேணும். அதுக்காக தான் நான் பேசிட்டு இருக்கேன். இல்லைன்னா உங்க கிட்ட நான் எதுக்கு பேச போறேன்? சொல்லுங்க?”  என்று அவளும் இப்பொழுது பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பேசினாள்.

அவள் பாவமாக பேசியதில் அவனின் மனது கொஞ்சம் இறங்கி தான் போனது. “சரிம்மா…  இந்தா என்னோட நம்பர நோட் பண்ணிக்கோ. ஏதாவது வேக்கன்சி தெரிஞ்சா நானே உனக்கு சொல்றேன். போதுமா?”  என்று அலுத்து கொண்டே சொன்னவனோ தன்னுடைய என்னை அவளுக்கு கொடுத்தான்.

அவளோ அவனுடைய எண்ணை வாங்கிக் கொண்டு புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.

திருமணம் நின்ற பிறகு அவன்  நிறைய நாட்கள் கண்ணீர் விட்டே அழுது இருப்பான்.

சில நாட்களுக்கு பிறகு இப்பொழுது தான் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தான்.

அன்று அவனின் கண்ணீருக்கான பரிசாகத்தான் இப்பொழுது அவனுக்கு இந்த காதல் கிடைத்திருக்கிறது.

அதிகாலையில் பூஜாவின் திருமணம் முடிந்ததும், வேகவேகமாக பெங்களூரில் தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு கிளம்பிய கண்ணன் கலங்கிய கண்களோடே பேருந்தில் பயணித்து கொண்டிருந்தான்.

பேருந்தில் அவன் வந்து கொண்டிருக்கும் பொழுது பூஜாவின் நினைவுகள் தான் அவன் மனதை சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருந்தது.

எத்தனை வருட காதல்?  எப்படி எல்லாம் அவளுடன் வாழ வேண்டும் என்று கனவு கண்டிருப்பான்? எப்படி எல்லாம் அவளை உருகி உருகி காதலித்திருப்பான்?  அவளுடைய பழைய நினைவுகளை எல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டே ஒரு வழியாக பெங்களூர் வந்து சேர்ந்திருந்தான்.

அவனுடைய போனில் இருக்கும் பூஜாவின் புகைப்படங்களை பார்க்கவும் முடியாமல், அதை அவன் ஃபோனில் இருந்து டெலிட் செய்யவும் முடியாமல், இரண்டுக்கும் இடையில் ஒரு போராட்டத்தில் சிக்கித் தவித்து கொண்டிருந்தான் அவன்.

அவளுடைய புகைப்படத்தையாவது  பார்க்கலாம் என்று நினைத்தால், இன்னொருவனின் மனைவியை எப்படி பார்க்க முடியும்? என்று அவனுக்கு அது அருவருப்பாக இருந்தது.  அதே சமயம் அவளுடைய புகைப்படத்தை தன்னுடைய ஃபோனில் இருந்து அழித்துவிடலாம் என்று முயற்சி செய்தாலும், அதற்கும் அவனின் மனது இடம் கொடுக்காமல் தவித்துக் கொண்டிருந்தான். அட்லீஸ்ட் அவளுடைய புகைப்படமாவது தன்னுடன்  இருக்கட்டுமே என்று நினைத்தான்.

தன்னுடைய போனிலேயே  அவனால் அவளை அழிக்க முடியவில்லை. அப்படி இருக்கும் பொழுது அவனுடைய மனதில் இருந்து எப்படி அவளை அழிக்க போகிறான் என்று தான் அவனுக்கும் தெரியவில்லை.

பூஜாவை பற்றிய நினைவிலேயே காலையிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட நாக்கில் படாமல் பெங்களூர் வந்து சேர்ந்திருந்தான்.

மனவலியிலும் உடல் சோர்விலும் அவனுக்கு மயக்கமே வருவது போல இருந்தது. தட்டுதடுமாறி ஒரு வழியாக அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து விட்டான்.

வீட்டின் கதவை வேகமாக தட்டிக் கொண்டே இருந்தான்.

கண்ணன் கதவை தட்டும் சத்தம் கேட்டதும் அந்த வீட்டின் கதவை திறந்தாள் பூர்ணா….

2 thoughts on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *