Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15

அத்தியாயம்-15

   அனிதா பாரதி இருவரும் செல்ல வேண்டிய பேருந்து சென்றதும் கூட்டம் குறைய அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் பாரதி அமர்ந்தாள். அனிதா ஸ்கூல் பையுடன் அவளை பார்வையிட, பாரதி எச்சில் விழுங்கி “ஒரு நட்பு ரீதியா உங்கண்ணாவோட எனக்கு பழக்கமிருக்கு. உங்கம்மா சந்தேகப்படற அளவுக்கு இல்லை. நான் தான் சொன்னேனே. ஒரு பேட் பாயை திட்டி தீர்க்க தனியா பார்க்க போகவும், எனக்கு உதவினார்.‌

  என்னை விடு. ஒரு வாரமா உன் மூஞ்சி சரியில்லை. என்னை அக்காவா நினைச்சு எதுவானாலும் என்னனு சொல்லு.” என்று அவளது கையை ஆதரவாய் பிடித்து கேட்கவும் அனிதா “உங்களுக்கு என்னோட ஆக்டிவிட்டிஸ்ல எனக்கு ஏதோ பிராப்ளம்னு தெரியுதா?” என்று கேட்டாள்.‌

பாரதிக்கோ இவளென்ன அதிகபட்சமான கேள்விகளை கேட்கின்றாள்.
“ம்ம்ம்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உன் முகத்தை பார்த்தா தெரியுது.” என்றாள் பாரதி.

  அனிதா உதடு துடிக்க லேசாய் விம்மலுடன் ஆரம்பித்து, எங்கம்மாவுக்கு தெரியலை. எங்க அண்ணா கூடவே இருந்தது. அதுவும் நான் பேசினா சிலதை அலட்சியப்படுத்துது” என்று உம்மென்று கூறினாள்.

  பாரதி தாடை பற்றி திருப்பி, “சேசே உங்கண்ணா உன் பேச்சை உன்னை என்னைக்கும் அலட்சியப்படுத்தலை. அவர் நேத்து உன்னை நோட் பண்ணி தான் சொன்னார். இல்லைன்னா எனக்கு எப்படி தெரியும்” என்றதும், அனிதா மெதுவாக யோசித்தாள்.

“அப்படின்னா.. அண்ணாவை முதல்ல அந்த தாழ்ப்பாளை சரிப்பண்ண சொல்லுங்க. காசு செலவு ஆகும். கல்லை வையுனு சொல்ல கூடாது.” என்று கூறவும், பாரதி எந்த தாழ்பாள் என்ன கல்லு?” என்று கேட்டாள்.

  “பின் வாசல் கதவுல இருக்குற தாழ்பாளு அக்கா. அந்த கதவால யார் வேண்டுமென்றாலும் ஈஸியா உள்ள வந்துடுவாங்க.” என்றாள்.

“அனிதா…. நீ சின்ன பொண்ணு இல்லை. என்ன சொல்ல வர்றனு தெளிவா சொல்லு.” என்றாள் பாரதி.
 
   “அந்த ஆனந்தராஜ் அண்ணா இருக்குல்ல… அது எப்ப பாரு… அம்மா இல்லாத நேரமா பார்த்து அந்த பின்வாசல் கதவு திறந்து வருது.
  என்னிடம் வந்து, இன்னா பாப்பா.. அம்மா இல்லையா. அச்சோ இருக்கும்னு வந்தேன்னே. இன்னா படிக்க?
  உங்கண்ணாவிடம் ஒரு விவரம் கேட்க வந்தேன் அதுயிதுனு வந்துடுது. படிச்சிட்டு இருக்கும் போது சட்டமா உட்கார்ந்து கண்ட இடத்துல தொடுது.” என்றாள்.

பாரதிக்கு திக்கென்ற உணர்வு‌. “யாரு வட்டிகடை ஆனந்தராஜா? ஏன் ஆன்ட்டி இல்லாத நேரமா வர்றார்? கண்ட இடத்துல தொடறார்னா… பேட் டச்?” என்று பதறினாள்.

சமீபத்தில் வன்முறைக்கு ஆளான பாரதிக்கு இந்த பேச்சு அதிர்வை தந்தது.

  “நாங்க இருக்கற வீடும் ஆனந்தராஜ் அண்ணாவோடது தான். முன்ன அப்பா இருந்தவரை வீட்டுக்குள்ளவே வரமாட்டார்.
  இப்ப அம்மாவும் அண்ணனும் வீட்ல இல்லாதப்ப வர்றார். முன்னாடி கதவு மூடிட்டு தான் வீட்ல படிப்பேன். ஆனா அவரு பின் வாசல் பக்கமா வந்து ‘என்ன பாப்பா… படிக்கறியா? அண்ணா வூட்ல இல்லையா? வாடகை பணம் வாங்கலாம்னு வந்தேன்னு நிற்பார். அண்ணாவிடம் ஏதோ பெரிய வேலைக்கு ரெகமெண்ட் பண்ணறதா கூட சொல்லி வருவார்.
  முன்ன எல்லாம் கன்னத்தை தொட்டு பேசுவார். ஷோல்டர்ல கை வைப்பார். இப்ப கடைசியா அன்னிக்கு சனி கிழமை வீட்ல அம்மா அண்ணா இல்லாதப்ப பாதி டிரஸ் அவுத்துட்டு குளிக்கலாம்னு இருந்தேன். யாரோ உள்ள வந்த மாதிரி இருக்குன்னு படக்குன்னு கதவை திறந்தா, பாத்ரூம் பக்கம் கல்லை போட்டு எட்டி பார்த்திருந்தார்.

நான் திட்டவும், என்ன பாப்பா… வூட்ல யாரிடமாவது சொன்ன, வீட்டை காலி பண்ண சொல்லிடுவேன். இப்ப தான் உங்கண்ணா ஏதோ வேலைக்கு போறான்.‌ அம்மாகிட்ட சொல்லறேன் அண்ணனிடம் சொல்லறேன்னு நின்ன, தங்கற வீடும் போயிடும். ஏதாவது ஒரு வீடு தேடி இந்த உங்களால் அலைய முடியுமா? இங்க இருக்கற நாலைந்து வூடீ எந்து. கங்க பாதிக்கு மேல இருக்கறவங்க என்னாண்ட வட்டி பணத்தை வாங்கறவங்க. உங்க அம்மா கூட உங்க அப்பா செத்தப்ப கடன் வாங்கியிருக்கு. நீ படிக்கவும் கடன் வாங்கியிருக்கு. என்னை பத்தி சொன்ன, அப்பறம் உனக்கு தான் நஷ்டம்னு மிரட்டினார். அதான்… தாழ்பாளை ஒழுங்கா போட சொல்ல சொன்னேன். முன் வாசல் பூட்டிடுவேன். பின் வாசலும் தாழ்பாள் இருந்தா சேப்டியா இருக்கும் நிம்மதியா படிப்பேன். இந்த ஒரு வாரம் நிம்மதியா படிக்க முடியலைக்கா ” என்றாள்.

“இதெல்லாம் அண்ணா அம்மாவிடம் யோசிக்காம சொல்லணும் அனிதா.” என்றாள் பாரதி.
 
  “என்னனு சொல்லறது…  அம்மா இப்ப தான் அண்ணாவிடம் நல்லா பேசுது.
அண்ணாவுமே இப்ப தான் வேலைக்கு ரெகுலரா போகுது. அண்ணா ஏதாவது கோபத்துல பேசி கை ஓங்கிடுச்சான்னா? எனக்குன்னா எங்கண்ணா கை நீட்டிடும். அப்பறம் சட்டுனு அந்தாளு ஆனந்தராஹஜூ வூட்டை காலி பண்ண சொல்வார்.
அண்ணாவுக்கு நான் கேட்ட பார்க்கர் பேனாவை வாங்கவே காசுயில்லை. அப்படியிருக்க சட்டுனு வீட்டை விட்டு வெளியே போனா வேற வூட்டுக்கு போக காசு வேணுமே. அது எங்க போகும்.
  அந்த பார்க்கர் பேனா கூட நீங்க வாங்கி தந்திருப்பிங்களோனு எனக்கு சந்தேகமா இருக்கு.” என்றாள்.

  பாரதி அவசரமாய் மறுத்து, “அந்த பேனா உங்கண்ணா தான் வாங்கினார். நான் வாங்கி தரலை.” என்று மறுக்க, “அண்ணாவா வாங்கி தந்தா நல்லது தான்.
   எங்களை மாதிரி ஆட்களுக்கு இது மாதிரி பார்க்கர் பேனா எல்லாம் கனவு தானேக்கா. அப்படியிருக்க அண்ணா வாங்கி தரலைன்னா கவலைப்பட முடியுமா? ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டைனு எங்கம்மா அடிக்கடி சொல்லும்.” என்றாள்.

   “உன்னிடம் அந்த ஆனந்தராஜ் இதுவரை எல்லை மீறலைல?” என்று தெளிவாக கேட்க, “இல்லைக்கா… இரண்டு தடவ தாடை கன்னம் தோள்ல கைப்போட்டுச்சு. அன்னிக்கு குளிக்க டிரஸ் கழட்டினப்ப எட்டி பார்த்துச்சு. நான் பாதில கவனிச்சிட்டேன். அதுலயிருந்து நான் உஷாரா இருக்கேன். ஏதாவது மறுபடியும் வந்துடுமோனு தான் பயப்படறேன்.” என்றதும் பாரதிக்கு நிம்மதி படர்ந்தது.

  “சரி.. உங்கண்ணாவிடம் நான்  பேசறேன். தாழ்பாளை மாத்த சொல்லறேன்.” என்று தட்டிக்கொடுக்க, “அக்கா.. உங்களுக்கும் எங்க அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்க, பாரதியோ “உங்கண்ணா என்னோட நெய்பர். அவர் மட்டுமில்லை. நீயும் தானே.” என்று மென்னகை விடுக்க, “ஆனா நீங்க எங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னயே அண்ணாவை தெரியுமா?” என்று கேட்க, பாரதி மௌனமாய் கடிகாரத்தை பார்த்து, “எனக்கு ஆபிஸுக்கு நேரமாகுது. உன்னோட ஸ்கூலுக்கு போற பஸ் வருது. நீ அதுல போ. நான் ஆட்டோ பிடிச்சி இன்னிக்கு போறேன்.” என்று அவசரமாய் அனிதாவை பஸ்ஸில் ஏற்றினாள்.

  அனிதாவும் இதற்கு மேல் தாமதமானாள் சரிவராது என்று ஏளினாள். இப்பொழுதே பிரேயர் முடிந்திருக்கும். அட்னன்ஸ் போடும் முன் சேர்ந்திட வேண்டுமென ஓடினாள்.

  அனிதா சென்றதும் பாரதியை தேடி பேருந்துக்கு மறுபுறம் இருந்து சரவணன் வந்தான்.

“தேங்க்ஸ்ங்க” என்றதும், “என்ன சரவணன் செய்ய போறிங்க” என்றான்.

“என்னங்க செய்ய முடியும். அனிதா சொன்ன மாதிரி வூட்டை காலி பண்ண முடியாது. அதே நேரம் ஆனந்தராஜை பகைச்சிக்க முடியுமா? தாழ்பாளை வாங்கி சரி பண்ணி கதவை பூட்டணும். அதுக்கு எவ்ளோ மொய் வைக்கணுமோ” என்று மெய்யாய் வருந்தினான்.

  பாரதி அவள் கைப்பை எடுத்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்து கொடுத்து, “இதை வச்சிக்கோங்க. தேவைப்பட்ட இன்னும் வேண்டுமின்னாலும் வாங்கிக்கோங்க. முதல்ல அந்த கதவை சரிப்பண்ணிடுங்க. பாலியல் வன்முறைக்கு ஆளாவது எல்லாம் ரொம்ப கஷ்டம்ங்க. உங்க தங்கைக்கா எந்த கெட்டதும் வரக்கூடாது. அவளை நிம்மதியா படிக்க வைக்கணும். புத்திசாலி குழந்தை. என்‌ டிரஸ்ஸோட பில் இருக்கறதை வச்சி குப்பையில பிரியாணி கடை பெயரை பார்த்து நேத்து வாங்கி தந்தது நான் தான்னு கண்டுபிடிச்சிட்டா.
   நல்லா படிக்கிற குழந்தைக்கு தட்டி கொடுத்து நான் இருக்கேன்னு ஒருத்தர் சொன்னா போதும். பழையபடி மாறிடுவா. அதோட பெரிய ஆளா வருவா.” என்றதும், பாரதியின் வாழ்வியலில் அவள் மாறிக்கொண்டு இருப்பதை சரவணனும் அறிந்துக் கொண்டான்.

  முதலில் பணத்தை மறுத்தவன், தங்கையின் நலனுக்காக பாரதியிடம் பணத்தை வாங்கினான். அவன் என்ன படத்தில் வரும் ஹீரோவா? அல்லது நாவலில் வரும் நாயகனா? தனக்கென ஒரு நீதி, வழி, என்று வைத்து கெடுதல் செய்யும் மற்றவரை அடித்து துவசம் செய்ய? அவன் மிகச் சாதாரணமான துப்புரவு தொழிலாளி. வட்டிக்கடை ஆனந்தராஜ் எல்லாம் இந்த ஏரியாவுக்கு வட்டிக்கு பணம் தந்து பெயர் எடுத்தவன். அவனோடு மோதுவது முடியாது.
ஒருவன் நீதி நைர்மை என்று ஙெட்டவனோடு மோதி வாதம் விவாதம் செய்கின்றானென்றால் ஒன்று அவன் பொருளாதாரம் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். அல்லது யாரையும் சார்ந்திருக்காத வாழ்வில் இருக்க வேண்டும். பிச்சைக்காரன் கூட யாரையும் சார்ந்து வாழ மாட்டான். நடுத்தெரு தான் வீடு என்றதால் ‘எவனா இருந்தா எனக்கென்ன போடா’ என்ற எண்ணம் உண்டு. இங்கே தாய் தங்கை என்ற பெண்கள் வாழும் இடத்தில், கடனும் பொறுப்பும் உள்ளவனாக, அடிப்படை பொருளாதார குடும்பத்தை சார்ந்து வாழும் சரவணன் கள்வனை தடுக்க வழியின்றி தன் வீட்டு பொண்ணை பாதுகாக்க அவளுக்காக பூட்டு போட்டான்.

இந்த உலகத்தில் ஒரு மனிதன் தன் தேவைக்கான விஷயத்தை சரிசெய்ய, அடுத்தவனிடம் கையேந்தும் நிலைமை வரவேண்டாமென்ற வேண்டுதலோடு பழைய கதவை சரிசெய்யும் மரஆசாரியை அழைத்து செல்லும் முடிவோடு சென்றான்.

    பாரதியும் ஆட்டோவில் தனியாக பயணிக்க, ஆரம்பித்தாள்.

  இந்த சரவணன் தனக்கு யார்? என்ன உறவு? அவனுக்கும் தனக்கும் உண்டான பந்தம் என்ன? விமலா ஆன்ட்டியும் இதே வினாத்தொடுத்தார்.
  இப்பொழுது அனிதா வேறு கேட்க பதிலென்ன?
  
   பாரதிக்கு வேறென்ன மனிதாபிமானம், நன்றி கடன். இதை தவிர வேறென்ன?

  தன்னை நலுங்கிய உடையோடு குப்பையில் அரை நிர்வாண உடலுடன் வன்புணர்வு ஆளான விதமாக கிடந்த பொழுது தன்னை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியவன். அந்த நன்றிகடன்.

கூடுதலாக அவளை போலவே ஒரு‌பெண் அவள் பாதிக்கப்படக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் மனிதாபிமான அடிப்படையில் பாரதியால் உதவ முடியும் என்பதால் உதவுகின்றாள்.

  இதையே எண்ணி அலுவலகம் வந்து சேர, அங்கே பலூன் வெடித்து அவளை வரவேற்றனர் அவளது டீம் மெம்பர்.
  “ஹாப்பி பெர்த்டே பாரதி”
  “மெனிமோன் ஹாப்பி னிட்டர்ன்ஸ் ஆஃப்தி டே” என்ற வாழ்த்து மழை பாரதியை நனைத்தது.

  ஆளளுக்கு  வாழ்த்து தெரிவிக்க, கைகுலுக்கி நன்றி நவில்ந்து இனிப்பை வழங்கினாள்.

  மணிமேகலையோ, இன்று மகள் பிறந்த நாள் என்று வீட்டில் புலம்பியபடி, அவ பிரெண்ட் வீட்ல இல்லை. ஹாஸ்டலிலும் இருப்பது போல தெரியலை. எங்க என்னனு இன்னிக்கு இந்த டிரஸ் ஸ்வீட் எல்லாம் எடுத்துட்டு போய் அவளை மறைந்து சென்று தங்கியிடத்தை கண்டறிய வேண்டுமென பாரதி அன்னை முடிவெடுத்தார்.

  • தொடரும்.
    -பிரவுணா தங்கராஜ்

10 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15”

  1. Dharshinipriya

    Super sis nice epi 👌😍 endha pengaluku endha prechanai la erundhu eppo dhan viduvukaalam varumo🙄 bharadhi romba azhaga handle pandra paavam anitha😐

  2. Kalidevi

    anitha romba smart nalla arivana ponu evlo alaga kavanichi iruka paru vangitu vanthatha , aana intha abuse mattum ponungaluku eppadiyathu nadakuthu eppadi thadukurathu niruthurathu ? ippadi tha iruku

  3. இந்த ஆனந்தராஜை எல்லாம் என்ன சொல்றது, சின்ன பிள்ளைகிட்ட போய் இப்படி பன்றான்!!.. பைத்தியம்புடிச்சவன்!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!