Skip to content
Home » அரிதாரம் – 10

அரிதாரம் – 10

நிகேதன் இன்னும் ஆராதனாவை தாம் காதலிக்கின்றானோ என்று சந்தேகப்படுகின்றானோ என்று நினைத்த பிரணவ் “தன் காதல் முடிந்த காதல்” என்று நிகேதனுக்கு புரிய வைக்க முயற்சித்தான். 

“ச்சே ச்சே, நான் உங்களை சந்தேகப்படவில்லை” என்று நிலைமையை சீர் செய்தான் நிகேதன். 

“உங்களுக்காக இல்லாவிட்டாலும், ஆராதனாவிற்காக நான் நிச்சயம் அவளிடம் பேசுகிறேன்” என்றான் பிரணவ். 

நிகேதனும் தலையை சொரிந்து கொண்டே, “இப்பொழுதே பேசலாமா?” என்றான் அசட்டுத்தனமாக சிரித்துக் கொண்டு. 

“ஹலோ சார். கொஞ்சம் மணிய பாருங்க. மணி பன்னிரெடரை ஆகுது. இந்நேரத்துக்கு ஒரு பொண்ணு ஃபோன் பண்ணி பேசினால் நல்லா இருக்குமா?”  என்றான்.

“ஆமால, டைம் ஆயிடுச்சு. நான் ஏதோ இப்பதான் சாயங்காலம்” என்று ஏதேதோ பேசி சமாளித்தான். 

“சரி சரி, விடுங்க ரொம்ப வழியுது” என்று இருவரும் பேசி சிரித்தனர். 

நீங்க கவலைப்படாதீங்க. நாளைக்கு நான் அவளிடம் பேசுகிறேன்” என்று சொல்லிய பிரணவ்”உங்களுக்கு நான் அவளை, அவள் இவள் என்று பேசுவது வருத்தமாக இருக்கிறதா?” என்றான். 

“ச்சே ச்சே. அதெல்லாம் ஒன்றுமில்லை உங்களுக்கு அவள் தங்கச்சி போல் அல்லவா?” என்றான் நிகேதனும் சிரித்துக் கொண்டே. 

“நான் எப்போ அவள் எனக்கு தங்கச்சி போல் என்றேன். என் அத்தை பொண்ணு என்று வேண்டுமானால் சொல்லுவேன். சார் கொஞ்சமாவது உங்களுக்கு மூளை இருக்கா? காதலித்த பெண்ணை யாராவது தங்கை என்பார்களா?” என்றான் சற்று கோபமாக. 

“கூல் கூல். உங்கள் காதல் முடிந்து விட்டது என்றீர்களே, அதனால் தங்கை பாசமோ என்றுதான், அதுவும் விளையாட்டிற்கு தான் சொன்னேன். அப்பா என்ன கோவம் வருகிறது” என்றான் நிகேதனும் அவனின் தோளில் கை போட்டு. 

“சரி டைம் ஆச்சு நீ நாளைக்கு பேசலாம். கொஞ்ச நேரம் தூங்கலாம்” என்றான் பிரணவ்.

அவனின் கைப்பிடித்து குழுக்கி லேசாக அணைத்து, “உண்மையில் உன்னை கண்.. உங்களை கண்டு நான் வியக்கிறேன். உங்களது நட்பு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றான் நிகேதன். 

“நாம் இப்பொழுது சந்திக்காமல் ஆராதனாவை நீங்கள் திருமணம் செய்த பிறகு சந்தித்தாலும், நான் உங்களுடன் நட்பு பாராட்டி இருக்கத்தான் செய்வேன்” என்றான் அவனும் கர்வம் ஆக. 

“அதேபோல் நீங்களும் ஒன்றும் சளைத்தவர் அல்ல. நீங்கள் கல்யாணம் பண்ணிக் கொள்ள இருக்கும் பெண்ணின் காதலனிடம், இவ்வளவு சகஜமாக பேசுகிறீர்களே” என்றான் புன்னகையுடன். 

நாம் இருவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம். அதனால் ஃபிரீயா பேசலாம். நீங்.. நீ என்னை தாராளமாக நீ, வா,போ என்றே சொல்லலாம்” என்று நிகேதனை தோளுடன் அணைத்து கொண்டான் பிரணவ்.

நிகேதனும் அவனை அணைத்து ரொம்ப த்தேங்ஸ்டா” என்று புன்னகைத்தான். இருவரும் பேசி முடித்து உறங்கச் சென்றனர். 

தன் அண்ணனுடன் பேசிவிட்டு தன் இருப்பிடத்திற்குச் செல்லும் வழியிலேயே தீபனுக்கு நான்கைந்து தடவைக்கு மேல் ஃபோன் வந்துவிட்டது. தனது இருப்பிடத்திற்கு வந்ததும் ஃபோனை எடுத்து இதுவரை வந்த நம்பருக்கு உடனே ஃபோன் செய்தான். 

அந்தப் பக்கம் ஃபோன் எடுக்கப்பட்டதும், “ஒரு மனுஷன் ஃபோனை எடுக்கலைனா. அவன் ஏதோ வேலையில் இருக்கான் என்று நினைத்து அமைதியாக இருக்கத் தெரியாதா?” என்று கோபமாக கத்தினான். 

அவனின் கோபத்தைக் கண்டு எதிர் புறம் பதில் இல்லாமல் இருக்க, “இருக்கியா இல்லையா?” என்று ஃபோனை எடுத்து பார்த்து மீண்டும் காதில் வைத்தான். 

மீண்டும் அமைதியாக இருக்க, தன் நெற்றியில் கட்டை விரலால் தடவி தன் கோபத்தை குறைத்தான். 

“சரி, சாரி” என்று ராகமாக இழுத்தான்.

அப்பொழுதும் அமைதியாக இருக்க, “சரி இப்ப நான் என்ன பண்ணனும் சொல்லுடி?” என்றான் கொஞ்சலாக. 

உடனே மறுபக்கம் “நீங்க ஃபோன் எடுக்கலைன்னா ஏதோ முக்கியமான வேலையில் இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். தெரிந்தும் நான் விடாமல் ஃபோன் செய்கிறேன் என்றால் என்ன அர்த்தம்” என்று இனிமையான பெண் குரல் கேட்டது. 

அவள் கேட்ட பின்பு தான் நிதானத்திற்கு வந்தான் தீபன். “ஏ சாரி டி. இங்க ஒரு சின்ன பிரச்சனை. அதில் என் கவனத்தை வைத்திருக்கும் பொழுது தான், அதனால்தான் உன்னிடம் பேச முடியவில்லை. ரூமுக்கு வந்ததும் பேசலாம் என்று நினைத்தேன். அதற்குள் நீ ஓயாமல் ஃபோன் செய்யவும் கத்தி விட்டேன். சாரி. சரி, சொல்லு என்ன விஷயம்? நீ இவ்வளவு நேரம் கழித்து ஃபோன் செய்ய மாட்டாயே?” என்றான். 

“அப்பா, இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்களே!” என்று அவளும் சகஜமாக பேசினாள். 

“சரி, சொல்லு நிலா. என்ன விஷயம்?” என்று நேரடியாக விஷயத்தைச் சொல்லும்படி படபடத்தான். 

“அப்பா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துறாங்க” என்றால் மொட்டையாக.

“என்ன சொல்ற? மாப்பிள்ளை பார்த்துட்டாரா என்ன?” என்றான் அதிர்ந்து.

“ஆமாம், யாரோ அவரது நண்பரது மகனாம். ஐடி கம்பெனில வேலை பார்க்கிறானாம். இன்று ஆசிரமத்திற்கு வர சொன்னார், போனேன். அப்பொழுது அனைத்தையும் சொன்னார். நான் எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் என்றேன். காலாகாலத்துல எல்லாம் சரியா பண்ணனுமா என்று நிறைய அட்வைஸ் சொல்லி அனுப்பிவிட்டார். யோசித்து சொல்கிறேன் என்று வந்து விட்டேன்” என்றாள் கவலையாக. 

நிலா

தீபன் இருந்த ஆசிரமத்தில் வளர்ந்த பெண். கல்லூரி படிப்பு முடிந்ததும் வேலை பார்க்கும் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறாள். 

தீபன், நிகேதன் வீட்டிற்கு வந்த பிறகும் சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் விடுமுறை இருக்கும் நாள் எல்லாம் ஆசிரமத்திற்கு சென்று வரும் பழக்கத்தை வைத்திருந்தான். அவன் வேலைக்குச் சென்ற பிறகு கூட தன்னால் முடிந்த உதவியை ஆசிரமத்திற்கு செய்து கொண்டு தான் இருக்கிறான். 

அப்படி ஆசிரமத்திற்கு செல்லும் பொழுது தான் நிலாவை பார்த்தான். அவன் கல்லூரி முதலாம் ஆண்டு செல்லும் பொழுது நிலா பிளஸ் ஒன் படித்து கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் சாதாரணமாக கடந்து விடும் தீபன் ஒருநாள் அவளைக் கண்டு அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான். ஒருவேளை இதுதான் காதலாக இருக்குமோ என்று அதில் லயித்தான். பின்னர் தான் தன் நிலை உணர்ந்து தன் தலையை தட்டிக் கொண்டு முதலில் படி என்று அவளை விட்டு விலகினான். ஆனாலும் அங்கு செல்லும் பொழுது அவளை பார்க்கும் பொழுது அவனுக்குள் ஒரு புதுவித உணர்வு பொங்குவது அவனுக்கு மிகவும் பிடித்தே இருந்தது. 

அவன் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பிறகு அவளது படிப்பிற்கான செலவை பார்த்துக் கொள்வதாக நிர்வாகியிடம் சொல்லிவிட்டான். 

நாட்கள் கடக்க நிலாவின் மீது தனக்கு இருப்பது காதல்தான் என்பதை புரிந்து கொண்டு, சென்ற வருடம் அவள் படிப்பை முடிக்கும் தருவாயில் தன் காதலை அவளிடம் தெரிவித்தான்.

முதலில் தயங்கி மறுத்தாலும், தீபனது நடவடிக்கையில் அவளும் அவனை காதலிக்க தொடங்கினாள். அவள் படிப்பு முடிந்ததும் வேலை கிடைத்து ஒர்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருக்க, தினமும் வேலைக்கு அழைத்துச் சென்று அவளை அலுவலகத்தில் விடும் வேலையை தீபன் எடுத்துக் கொண்டான். 

அப்படியே அவர்கள் காதல் வளர்ந்தாலும் அது மற்ற யாருக்குமே தெரியாமல் பார்த்துக் கொண்டனர் இருவரும். இப்பொழுது ஆசிரம நிர்வாகி நிலாவிற்கு வரன் பார்த்து கூறிவிட்டார். இனிமேலும் காலம் தடுத்த முடியாது. 

“சரி நிலா. நீ கவலைப்படாதே. அவரிடம் இப்பொழுது திருமணம் வேண்டாம் என்று மட்டும் சொல்லு. நான் அப்பா அம்மாவிடமும் அண்ணனிடமும் இதைப் பற்றி பேசிவிட்டு, உனக்கு சொல்கிறேன். ஆனால் இப்பொழுது நிச்சயமாக என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. முதலில் நிகேதன் அண்ணாவிற்கு கல்யாணம் முடிய வேண்டும். அதன் பிறகு தான் நம் திருமணத்தைப் பற்றி யோசிக்கணும். சரியா?” என்றான் தீபன். 

“நானும் வேலைக்கு இப்பதானே போக ஆரம்பித்திருக்கிறேன். எனக்கும் உடனே திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. ஒரு இரண்டு வருடங்களாவது நான் வேலைக்கு சென்று, ஆசிரமத்திற்கு என்னால் ஆன உதவியை செய்ய வேண்டும்” என்றாள் நிலா. 

இருவரது எண்ணங்களும் ஒன்றாக இருக்க இருவரும் இணைவதற்கு வேறு தடங்களும் வருமோ..

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

2 thoughts on “அரிதாரம் – 10”

  1. Kalidevi

    super deepan yarukume theriyama love panitu iruka nee . namba mudilaye paravala ellarkum varathu thane una mariye think panra ponna pathu love panra . ipo nikethen doubt um clear aeiduchi pranav help panren solitan eni Aardhana va eppadi crt panrathu tha unnoda velaiya iruka pothu niketha . good luck

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *