அத்தியாயம்-10
Thank you for reading this post, don't forget to subscribe!காஞ்சிபுரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் சென்ற மக்களை தவிர வீட்டு பெண்களும் ஆங்காங்கே முதியவர்களும் திண்ணையில் வீற்றிருக்க, ஆட்டோ நின்ற அடுத்த நிமிடம் இருவருக்கும் சேர்த்து பணத்தை தந்துவிட்டு “தேங்க்ஸ் அண்ணா” என்று ஆட்டோ டிரைவரிடம் கூறிவிட்டு, “பை காரு” என்று அவளை காணாமல் வீட்டு கேட்டை திறந்து புயலாய் மறைந்தான்.
“ம்ம்” என்றவள், ஆட்டோக்காரரிடம் பணத்தை நீட்ட, தம்பி கொடுத்துடுச்சும்மா” என்றார் அவர்.
‘இவன் எதுக்கு நேக்கும் சேர்த்து தந்தான்.’ என்று கடுகடுத்தாலும் வீட்டை நோக்கி சென்றாள்.
கேட்டை திறந்து வீட்டுக்குள் வந்தவள் அங்கே அவளை வரவேற்ற துளசி மாடத்தில் உள்ள விளக்கொளியை தொட்டு கும்பிட்டாள்.
மெதுவாக வீட்டுக்குள் வரவும், ”அவா எல்லாம் கத்தரிக்க நினைக்கறா சீனிவாசா. அதான் நம்மாத்து பொண்ணு மேல குறை சொல்லிட்டு திரியறா. நீ கவலைப்படாதே” என்று பாட்டி சீனிவாசனிடம் உரைக்க “அப்பா… பாட்டி” என்று அழைத்தாள்.
பாட்டி பேத்தியை கண்டதும், “காருண்யா.” என்று அணைத்துக்கொள்ள, “என்னடா சொல்லாம கொள்ளாம வந்துட்ட” என்று சீனிவாசன் பதட்டமாய் கேட்டார்.
“நேக்கு மனசு சரியில்லைப்பா. உங்களை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்.” என்றாள்.
தங்களிடமே ஹரனின் மாமா, ஹரனின் தாய் தந்தையார் என்னவென்னவோ பேசினார். அப்படியிருக்க ஹரன் இவளிடம் என்ன பேசியிருப்பானோ என்று பயந்தார்.
“வாடாம்மா” என்று உச்சி முகர்ந்தவர், “ஏன்டிம்மா காலங்காத்தால ஆத்துக்கு கிளம்பி வந்துட்ட?” என்று பதற, “சொல்லறேன் பாட்டி” என்றாள் காருண்யா.
சீனிவாசனும் பாட்டியும் கூட வந்ததும் ஆரம்பிக்க வேண்டாமென, பிரயாணம் செய்த களைப்பால் ஸ்னானம் செய்ய அனுப்பினார்கள்.
“என்னப்பா திடுதிடுப்புன்னு காருண்யா வந்துட்டா. இப்ப என்ன சொல்லறது” என்றார் பாட்டி அமிர்தம்.
“எப்படியும் சொல்லி ஆகணுமே அம்மா. பிரச்சனை முடியற மாதிரி தெரியலையே. நம்ம எது சொன்னாலும் காதுல வாங்க மாட்டேங்குறாளே” என்று வருத்தமாய் பேசினார்.
“சரி ரொம்ப சீக்கிரம் வந்துட்டா. ஏதாவது செய்து சாப்பிட வச்சி பிறகு பேசுவோம். இத்தனை நாள் ஹரனிடம் போன்ல ஒன்னுக்கு ஒன்னா பேசியிருப்பாளே” என்றதும் பாட்டிக்கு தொண்டை அடைத்தது.
சீனிவாசனுக்கும் அந்த கவலை மட்டுமே. இந்த இடைப்பட்ட நாளில் மகள் மனதில் ஹரனின் இடம் இதயம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தால்..?
எதுவென்றாலும் அவளிடம் பேசியாக வேண்டிய கட்டாயம் உள்ளதே.!
இங்கு நாயகன் ராவணன் வீட்டில் மகனை கண்டு, ஆனந்தப்பட்ட ரோகிணி உச்சி முகர்ந்து கட்டியணைத்தார்.
“ஏன்டா வர்றேன்னு ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல? என்னங்க என்னங்க இங்க வாங்க. ராவணன் வந்துயிருக்கான்” என்று அழைத்தார்.
சிவராமன் வந்து மகனை கண்டார்.
“என்னடா லீவுக்கு வா வான்னு கூப்பிட்டா வரமாட்ட. இப்ப நீயா வந்திருக்க?” என்று கேட்டார். மகனை வைத்து பக்கத்து வீட்டில் பேசப்பட்டதில் அவருக்கும் சில விவரம் தெரியும் என்பதால் இலைமறையாக ஏதாவது காரணம் உண்டா என்று கேட்டார்.
“ஜஸ்ட் உங்களை பார்க்கணும்னு தான்.” என்றவன் குளிச்சிட்டு வந்து சாப்பிடறப்ப பேசறேன் மா” என்று சோபாவில் இருந்து எழுந்தான்.
“முன்னவே வருவதா சொல்லிருந்தா கோழி வாங்கி குழம்பு வச்சியிருப்பேன். என்னடா இளச்சி போயிருக்க? வெளியே சாப்பாடு சரியில்லையா?” என்று கேட்டார் ரோகிணி.
“நீங்க வேற ஏம்மா. நல்லா தான் சாப்பிடறேன். உங்க கண்ணுக்கு அப்படி தெரியுது. நான் ஃபிட்டா தான் இருக்கேன்.” என்றான் ராவணன்.
“இல்லைடா… லைட்டா மெலிஞ்சிட்ட” என்று ரோகிணி கூறவும், “முன்னலாம் அடிக்கடி நான்வெஜ் சாப்பிடுவேன். இப்ப பக்கத்துல காருண்யா இருக்களே. நான்வெஜ் சாப்பிட்டா பக்கத்துல வராம ஓடுவா” என்று கூற, ரோகிணியோ, “கேட்கணும்னு நினைச்சேன். என்னடா பிரச்சனை. அவங்க வீட்ல ரொம்ப சீரியஸா உன்னை வச்சி இழுக்கறார்.
காருண்யா அப்பா ஜீவனே இல்லாம நடமாடறார்.” என்று கேட்க, “அம்மா நான் ஒன்னும் பண்ணலை. நேத்தோட வேலையை முடிச்சி ஒரு மாடலை மேலதிகாரியிடம் காட்டணும். அதனால் பிராஜெக்டோட சேம்பிள் ரெடி செய்ய, நான் ஜெயந்த், ஷாலினி காருண்யா வேலை பார்த்தோம்.
ஜெயந்தோட அம்மாவுக்கு உடல் முடியலைன்னு அவர் சொல்லிட்டு போனார். ஷாலினி காருண்யா இரண்டு பொண்ணுங்க இருப்பதால் வேலை செய்து முடிக்க முடிவு செய்தேன். ஆனா ஷாலினி சொல்லாம கொள்ளாம ஓடிட்டா. நான் அதை கவனிக்கலை. காருண்யாவுக்கு மெஸேஜ் பண்ணியதையும் அவ லேட்டா தான் பார்த்திருக்கா.
சரி அப்ப உடனே ஷட்டவுன் பண்ணிட்டு வெளியே வந்தோம். எலி கிராஸ் ஆச்சு. பயந்து ஸ்கிட் ஆகறப்ப காரு ஷோல்டரை பிடிச்சேன். இதை போய் பிரச்சனைனு பெருசாக்கறாங்க. நான் நாளைக்கு சீனிவாசன் அங்கிளிடம் பேசலாம்னு நினைச்சா, காருண்யாவும் இங்க வந்து தொலைச்சிருக்கா.” என்று பொறுமினான்.
“காருண்யா வந்துயிருக்காளா?” என்று கேட்க, “ஆமா… நான் வந்த ஏசி பஸ்ல. என் கூட வரலை. ஆனா என் பக்கத்துல தான் அவளுக்கு சீட். டிரைவரிடம் மாத்த சொல்லவும் முடியாம, என் பக்கத்துல உட்காரவும் தவிச்சா. இதுல வாந்தி வேற. இப்பவும் ஒரே ஆட்டோல தான் வந்தோம்.” என்று விவரித்தான்.
ரோகிணி சிவராமன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சிவராமனோ “நீ போய் குளிச்சிட்டு வா. சாப்பிட்டு பேசுவோம்.” என்று அனுப்பினார்.
அவனும் தலையாட்டி அறைக்கு சென்றான். “என்னங்க இது? ஏற்கனவே கல்யாணம் தடைப்பட்டுடுமோனு சீனிவாசன் அண்ணா பயந்துட்டு இருக்கார். இதுல இன்னிக்கு வேற இப்படி சேர்ந்து வந்ததை இங்க இருக்கறவங்க பார்த்து அதுக்கு வேற கதை கட்டிட்டா?” என்று பதறி கேட்டார்.
“நாம என்ன செய்யறது? ஒவ்வொன்னுக்கும் விளக்கம் தரமுடியுமா? சின்னதுலயிருந்து பழகினவங்க அப்ப எல்லாம் தப்பா ஒரு வார்த்தை தப்பா பேசியிருங்காங்களா?!
அப்ப எல்லாம் இந்த வதந்தி எதுவும் வரலை. இப்ப மட்டும் தப்பா பேசினா என்ன அர்த்தம்? இது வேண்டுமின்னே போடப்படற பழி.” என்று கூறியவர், சமையல் கட்டை காட்டி, பையன் குளிச்சிட்டு சாப்பிட வந்துட போறான். சூடான இட்லியும், கடலை மாவு கரைச்சி ஊத்தி கடைசாம்பார் மாதிரி வைப்பியே அதை வை.” என்று அனுப்பினார்.
சிவராமன் ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டை எட்டி பார்த்தார். அங்கே நிசப்தமாக இருக்கவும், அவளும் இப்ப தானே வந்திருப்பா. சாப்பிட்டு பேச நினைக்கலாம். பாவம் இந்த பொண்ணுக்கு பார்த்த வரன் தடைப்பட்டா என்ன தான் ராவணன் காரணமில்லை என்றாலும், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டதில் துவண்டு போயிடுவாங்க. அம்மா இல்லாத பொண்ணு வேற’ என்று எண்ணியவர் மகனை காண சென்றார்.
தலையை துவட்டியபடி, “சாம்பார் வாசம் ஆளை தூக்குது. அதுக்குள்ள எப்படி அம்மா மேஜிக் பண்ணறிங்க” என்று வந்தவனுக்கு சூடாக இட்லியை வைத்து கடலை மாவு சாம்பார் ஊற்றினார்.
“ஈஸியா வைக்கற சாம்பார்டா. இந்த துவரம் பருப்புல வேக வைக்க நேரம் எடுக்கும். பாசி பருப்பு சட்டுனு வேகும். ஆனாலும் அதுக்கு பத்து நிமிஷமாவது குக்கர்ல ஒரு விசில் வைக்கணும். தாளிக்க வதக்கன்னு நேரம் இழுக்கும். இந்த கடலை மாவு சாம்பார் மட்டும் சட்டுனு பத்தே நிமிஷத்துல செய்யலாம்.
கடலை மாவை தேவைக்கேற்ப கரைச்சி வச்சி வெங்காயம் தக்காளி தாளிச்சு விடறப்ப இந்த கடலைமாவு கரைசலை ஊற்றி இரண்டு கொதிவரவும் இறக்கிடணும். கிட்டதட்ட சட்னி செய்யற நேரம் தான் ஆகும். இட்லி தோசைக்கு கடை சாம்பார் மாதிரி வீட்லயே தயாரிக்கலாம். நீ பெங்களூர்ல படிக்க வேலை பார்க்க போனதும், திடுதிப்புனு இன்னிக்கு மாதிரி வருவ. அப்ப செய்து செய்து பழகிடுச்சு. உனக்கும் இந்த ருசி பிடுக்குது.” என்று ஊற்ற வயிறு நிறைய சாப்பிட்டான்.
“காலையில பிரெட் பால் சாப்பிட்டு தான் வந்தேன்ம்மா. ஆனாலும் உங்க கையால சாப்பிடறப்ப ஒரு பீல்.” என்றவன் கை அலப்பினான்.
அதற்கு பிறகு காருண்யா வீட்டில் பேச போகலாமா என்று கேட்டவனிடம் சிவராமனோ “முதல்ல பொறுமையா இருடா. நாளைக்கும் லீவு தானே. பார்ப்போம்” என்று தடுத்தார்.
தன் சொந்த வீட்டில் ஒய்யாரமாய் அமர்ந்து, நிதானமாய் இருந்தான்.
இரண்டு முறை காஞ்சிபுரத்தை வலம் வர வெளியே வந்தான். காருண்யா தலை வெளியே தெரியவில்லை.
காருண்யா என்றில்லை, சீனிவாசன், அமிர்தம் பாட்டி என்று அவர்களையும் காணவில்லை.
ஆனால் வீட்டில் இருப்பதாக மாலை ஆனதும், துளசி மாடம், மாடவிளக்கில் ஆங்காங்கே வீட்டிலும் லைட் ஒளிர்வதை கண்டான். கூடுதலாக காருண்யா வீட்டிலிருந்து வந்த சாம்பிராணி வாசம் வேறு. இறைவனை பூஜை செய்யும் முறையில், எப்பொழுதும் போல இருப்பதை உணர முடிந்தது.
இதில் பக்தி பாடல்கள் வேறு, டிவியில் ஒலிக்க, அங்கும் இங்கும் நடந்தான். ஒரளவு வீட்டில் உள்ளவர்களை காருண்யாவே சமாளித்து விட்டதாக முடிவு கட்டியிருந்தான் ராவணன்.
காருண்யாவும் தன்னை போல பெற்றவர்களிடம், நேரில் சந்தித்து பேசி பிரச்சனையை களைந்து செல்ல வந்திருப்பாள். எப்படியும் பேசி முடித்திருப்பாளே’ என்று முடிவு கட்டினான்.
எது எப்படியோ பிரச்சனை களைவது தானே நோக்கம்.
இவ்வாறு நினைத்து அன்றைய பகல் முழுதும் கடந்தது. அடுத்த நாள் காலை ஜாக்கிங் சென்று வந்த ராவணன் எதிரே, அமிர்தம் பாட்டி நடந்து வந்தாள்.
கோவிலுக்கு சென்று வந்துள்ளதை முகமே காட்டி கொடுத்தது.
“அப்படியென்ன வேண்டுதல் இந்த பனியில” என்று ராவணன் கேட்க ”தம்பி இதுல எல்லாம் நீங்க தலையிட கூடாது. இது இறை பக்தி” என்று முன்பு கடந்த அமிர்தம் பாட்டியோ, எதுவும் கூறாமல் சப்தமின்றி வீட்டுக்குள் சென்றார்.
சற்று நேரத்தில் “அவா இங்க வந்ததுக்கும் நான் நம்மாத்துக்கு வந்ததுக்கும் என்ன பாட்டி தொடர்பு. அவன் அவா ஆத்துக்கு போனான். நம்ம ஆத்துக்கு நான் வந்தேன். சேர்ந்து எல்லாம் வரலை. எப்படியோ கோ-இன்சிடெண்டா அவா வந்துட்டா.” என்று கூறுவது சிவராமன் பெட்ரூம் வரை கேட்டது.
“அவா என்னென்னவோ சொல்லறாளே? நீ நேத்து அவனோட ஒட்டி உரசி பஸ்ல வந்ததாகவும், நீ மயங்கி விழ, அவன் தண்ணி கொடுத்து, ஆம்பளையாண்டா மாதிரி பார்த்துக்கிட்டதா சொல்லறாளே. இதுல போட்டோ வேற.” என்று சீனிவாசன் கத்தவும், “நேக்கு தெரிந்து நான் யோக்கியமா தான் இருக்கேன். மத்தவா பேசறதை கேட்டு என்னிடம் கேள்வி கேட்காதிங்கோ. என்னைக்காவது உங்களை மீறி நான் நடந்திருக்கேனா?” என்று காருண்யா அழுதுக்கொண்டே பேசுவதை கேட்டார்.
இதற்கு மேல் ராவணன் பற்றிய பேச்சை, கலந்து பேசாமல் இருப்பது தவறு என்று சிவராம் முடிவெடுத்தார்.
அதேன்னவோ, பேசிவிட்டால் நிம்மதி உருவாகும் என்று நம்பினார்.
நம்பிக்கை அதானே எல்லாம்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌 eppo kaarunya veetlaiye eppdi ketka arambichitangala🙄 endha hari ku vendam na chumma poga vendiyadhudhane eppo enna nadakka pogudho 🧐
Interesting
Super !!
So sad. Today reality without doing by women. Women will be corned for all the mistakes happened. Intresting sis.