Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-18

53 / 100 SEO Score

அத்தியாயம்-18

சமையலறையில் சமைத்து கொண்டே மெதுவாக உற்சாகத்துடன், சாரா பாடினாள். அவளுக்கு தனக்காக சார்லஸ் நிர்மலாவிடம் பேசியதை கண்டு சிறு ஆனந்தம்.

‘மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு
காதல் காதல் என்று சொல்லுச்சா
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்க ஆசை வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ
வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சினுளில் ஒட்டிச்சின்னு
ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே
என்று பாடும் பொழுது சாரா கையில் கரண்டி பிடித்தபடி நின்றாள். சார்லஸோ அன்னை அறைக்குள் இருக்க சாரா மகிழ்வதை கண்டு சிரிப்புடன் ஏறிட்டான்.

‘இது நல்லா இருக்கும் தானே…?’
என்று அவள் மனசுக்குள் அவளே கேட்டுக்கொண்டாள்.
அந்த நேரம் சார்லஸ் உள்ளே வந்தவன், “ஹேய்… என்ன ஸ்மெல் இது?” என்று ஆழ்ந்த மூச்சை இழுத்தான்.
சாரா திரும்பி பார்த்தாள்.

அவள் கண்களில் இன்னும் அந்த சிறிய பயம் இருந்தாலும்,
இன்று அதற்கு மேல ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
“டாக்டர் சாரே.. நான் சமைச்சேதில் வாசம் வந்தல்லோ.” என்றாள்

அவன் சிறு கரண்டியில் எடுத்துக் கொண்டு ஒரு முறை சுவைத்தான்.
ஒரு நொடிக்கு மேலாக சுவைப்பார்த்தவன், மெய்மறந்து  நின்றான். “வாவ்…!” என்றதும் சாரா சற்றே திடுக்கிட்டாள்.
“சாரா… இது ரொம்ப நல்லா இருக்கு. இப்பவே சாப்பாடு வை சாப்பிடனும்னு ஆசையாயிருக்கு” என்று மனமார சொன்னான்.

அவள் முகத்தில் மலர்ந்த அந்த சின்ன புன்னகை, அவள் இதுவரை அடக்கி வைத்திருந்த மகிழ்ச்சியை பறைசாற்றியது.

அந்த நேரம் நிர்மலா வந்து அமர்ந்தார். அவருக்கும் தட்டு வைக்கப்பட்டது. கீயில் செய்த மீன் பொரியல் அதை உதிர்த்து புட்டு போல மாற்றி, கீ சாதம் வேறு. கூடவே காய்கறிகள் சேர்த்த அவியல் அடுக்கினாள்.
சார்லஸ் சாப்பிட்டு முகப்பாவனையுடன் ரசிக்க, நிர்மலாவோ மகனின் அந்த ஆனந்தத்தையும் சாராவின் மகிழ்ச்சியையும் கண்டு பாத்திரத்தை திடுக்கென தள்ளினார்.

“இதென்ன இருக்கற நெய்யை மொத்தமா காலி பண்ணிட்டியா? நெய்யை ஊத்தி உடம்பு ஏறி குண்டாகவா?” என்று இரண்டு வாய் அள்ளி வைத்தவர், “சை… வெறும் நெய்யை தவிர ஒன்னும் இல்லை. இதுக்கு இவன் ஆஹா ஓஹோனு புகழறான்.” என்று சாப்பிட்ட தட்டிலேயே தண்ணீரை ஊற்றி கை அலம்ப சாரா உடம்பே உறைந்தது.

சாரா அதைப் பார்த்தபடி திகைத்து நின்றாள். அவள் கையில் இருந்த கரண்டி நடுங்கியது.
“இப்படி சமைச்சா யாரு சாப்பிடுவாங்க? சார்லஸ் அப்பாவையும் என்னையும் இதயநோயாளியா மாத்தபோறியா”
என்று கூறி எழுந்து சென்றார்.

சார்லஸ் முகம் இறுகியது.
ஆனால் அவன் சாரா எதிரில் ஒன்றும் பேசவில்லை. தந்தை மோஸஸ் மெதுவாக பார்த்தான்.
“என்னப்பா இது அம்மா இப்படி மாறிட்டாங்க?” என்றார் வருத்தமாக.

நிர்மலா அறைக்கு சென்றதால், மோஸஸோ “ஆண்டவர் இவளுக்கு நல்ல புத்தி தரணும் சார்லஸ். இல்லை… இவ மனமும் குணமும் சாத்தான் வசப்படுது. வேற சொல்ல தெரியலை.” என ந லைந்து வாய் சாப்பிட்டு சென்றார்.

சாரா நிர்மலா தட்டையே பார்த்தாள். அவள் சமைத்த சாப்பாடு… தண்ணீரில் கரைந்தது.
அவள் உள்ளமும் அதே போல கலக்கமாக இருந்தது.
சார்லஸ் மெதுவாக அவளருகே வந்து கையை தொட்டான்.
“ஏய்…” என்று ஆசையாக கூப்பிட, அவள் முகம் உயரவில்லை.
“அம்மா சாப்பிடலன்னா… கண்டுக்காத. வேண்டுமின்னே செய்தா நாம என்ன செய்யறது. நீ ஸ்ட்ராங்கா இரு.”என்று அவளது கையை மெதுவாக அழுத்தினான்.

சாரா மனம் லேசான மாற்றம் வரும் முன்னே “நான் கிளம்பறேன். ஹாஸ்பிடல் போகணும்.” என்று கடிகாரத்தை பார்த்து கூறிட,
அவள் தலையசைத்தாள்.

சாரா சாப்பிட்டு முடித்து அவள் அன்னை மரியத்திடம் பேசினாள். மெர்ஸி மேத்யூ இருவரும் நாளை  வருவதாக கூறியிருக்க, அதை கேட்டுக் கொண்டாள். மெர்ஸி அண்ணியிடம் நீங்க சந்தோஷமா பேசணும். அவங்களை கஷ்டப்படுத்த கூடாது கேட்டால்லா” என்று கூறினார்.

அதெல்லாம் மெர்ஸி என்னுடைய இன்னொரு பொண்ணாக பார்த்துப்பேன். அவளால் தானே உனக்கு விவாகம் கழிச்சு. நல்ல கணவன் சார்லஸ் அமைந்தது. அதனால் மெர்ஸியை நான் மகளாக காணும்” என்று கூறி சாராவை சந்தோஷப்படுத்தினார்.

சார்லஸ் போனப்பிறகு நிர்மலா அவராக வந்து தனியாக மோர்குழம்பு செய்து சாப்பிட்டார். சாரா ஏன் எதற்கு என்று கேட்டு நிற்கவில்லை. பிடிக்காத மருமகளென தெரிந்தப்பின் அவரிடம் அன்பையும் விளக்கமும் கொடுப்பானேன்.

மாலை சாயா போட்டு அவள் மட்டும் அருந்தினாள். நிர்மலா மோஸஸிற்கு எதலயும் கொண்டு போய் நீட்டவில்லை‌

க்ளினிக் சென்றதும் சார்லஸ் போன் பண்ணவில்லை.
மெசேஜ் செய்யவில்லை. எப்பொழுதும் தகவல் போல அறிவிப்பான். ரீச் ஆகிட்டேன். கிளம்பிட்டேன். என்று எதுவும் செய்யாததும் சாரா அதை பெரிதுப்படுத்தவில்லை.

இரவு தோசை செய்து தேங்காய்பால் ஊற்றி சாப்பிட்டார்கள்.
இரவு கூட்டுப் பிரார்த்தனை பொழுது, மோஸஸ் ஜெபிக்கவும் , சாரா இமை மூடினாள். நிர்மலா பிரார்த்தனை முடியவும் அறைக்குள் செல்ல, எப்பவும் போல ஹாலில் லைட் மட்டும் எரியவிட்டு சாரா சோபாவில் அமர்ந்திருந்தாள்.

வாசல் கதவை பார்த்தபடி, ஒவ்வொரு சத்தத்துக்கும் எழுந்தாள்.
ஒவ்வொரு முறையும்
ஏமாற்றம். கடிகாரம் நகர்ந்தது.

கண்கள் ஈரமானது.
அந்த நேரம் நிர்மலா அறையிலிருந்து வெளியே வந்தார்.
சாராவை பார்த்தார்.
“இன்னும் தூங்கலையா?” என்றதும்
சாரா மரியாதைக்கு எழுந்து நின்றாள்.

“டாக்டர் சாரே இன்னும் வரலில்லா?” என்று பதில் தந்து சாரா வாசலை ஏக்கமாய் பார்த்தாள்.
.
நிர்மலா ஏளனமாய் சிரித்தார்.
“என் பையன் எப்படின்னு எனக்கு தெரியாதா?” என்று மார்க்கமாய் கூறினார்.
அதை கேட்டு அமைதியாக நின்றாள்.

“நீ அவனை மனைவினு சொல்லிக்கிட்டு ஜம்பமா நின்னாலும்… உன்னோட உண்மை நிலை என்ன தெரியுமா?” என்று வினாத் தொடுக்க, அவள் இதயம் துடித்தது.

நிர்மலா நக்கலாம் “கர்த்தர் முன்ன கைப்பிடிச்ச பொண்ணு…
அந்த கடமைக்கு தான் அவன் உன்னை உருகி உருகி பார்த்துக்கறான். மத்தபடி அவனுக்கு உன்‌மேல இன்ட்ரஸ்ட் துளி கூட இல்லை.

ஒரு பொண்ணை ஆண்டவர் முன்ன விவாகம் செய்ததால் மாத்திரமே கர்த்தருக்கு பயந்து நிற்கறான். அதுவுமில்லா அவன் டாக்டர். கருணையும் அன்பும் கொண்ட டாக்டர். பலதரப்பட்ட பேஷண்ட்டிடம் கனிவாக பேசி பேசி உன்னிடமும் சாப்டா நடக்கறான். ஏன்னா நீயும் ஒரு பேஷண்ட் பாரு” என்றதும் சாரா மூச்சே வாங்க முடியாமல் நின்றாள்.

நான் சார்லஸுக்கு ஸ்பெஷல் என்று புரிய வைக்க சாராவுக்கு ஏதேனும் துடுப்பு கிடைக்காதா என்று ஏங்கினாள்.

நிர்மலாவோ இருக்கும் படகையும் கவிழ்க்கும் விதமாக, “இதுவே துகிரா இங்கயிருந்தா…
அவளோட காலடிலேயே இருப்பான். ஏன்னா அவன் பிரேமம் துகிரா மட்டுமே” என்று ஒவ்வொரு வார்த்தையையும் கத்தியாக பாய்ச்சினார்.

“ஒரு வேளை நீ உடனடியா என் மகனை சந்திக்கணும்னா.. ஒன்னு துகிராவா இருக்கணும். இல்லை…  பேஷண்டா இருக்கணும்.
நீ துகிரா கிடையாது. பேஷண்ட்…ன்னு வேண்டுமின்னா தாராளமா சொல்லலாம். சார்லஸை சந்திக்கலாம். அதுதான் உன் லைஃப்.” என்று காயப்படுத்திவிட்டு திரும்பி சென்றார்.

அந்த ஹாலில் சாரா மட்டும் இருக்க,
அவள் தள்ளாட்டத்துடன் மெதுவாக சோபாவில் உட்கார்ந்தாள். கண்ணீரை இப்போது தடுக்கவே முடியவில்லை.

அழுதழுது ஓய்ந்து, போன் எடுத்தாள். சார்லஸ் நம்பருக்கு அழைக்க விரல்கள் நீண்டது.
‘இந்த நேரம் பிஸியா இருப்பாரே.’ என்று மெசேஜ் டைப் செய்தாள்:

‘எங்க இருக்கிங்க?’ என்று கேட்டாள். ஒருவேளை பக்கத்தில் என்றால் அவன் வந்ததும் நெஞ்சில் சாய்ந்து அழவேண்டும் போல ஒரு போராட்டம்.
ஆனால் அவன் வேலையில் தன் குறுஞ்செய்தி கூட தொந்தரவாக மாறுமோ என்று உடனடியாக அழித்துவிட்டாள்.
அவள் சோர்வுடன் தலையை சோபாவில் சாய்த்தாள்.

“கிரேஸ்… நீ இறந்து நிம்மதியா போயிட்ட. பட்சே நான் இங்கே உயிரோடு சவமாயி.” என்று உதடுகள் நடுங்கின.
‘ராட்டினத்தில் ஏற இஷ்டமில்லா நான் விட்டிருக்கணும். என்ட தலைவிதி என்னை விட்டு போயி.
நானும் உன்னோடு மரிச்சு போயிருந்தால் சேமமாக இருந்திருக்கும். என்னால் இப்பரபஞ்சத்தில் நிம்மதியாக மூச்சு விட முடிவில்லா.’ என்று அழுதாள்.
அந்த இரவு சாரா தனியாக புலம்பி அழுது தூங்கவில்லை.

அடுத்த நாள். வாசல் திறந்த சத்தம் கேட்டது நிர்மலா சாராவை அசட்டையாக கடந்து டீயை கொதிக்க வைத்து பருகினார். மோஸஸ் வந்ததும் மருமகளை கண்டு அமைதியாக அவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டார். நிர்மலாவின் பேச்சுக்கு அமைதி கிப்பாதே நல்லது என்ற அனுபவ பாடமும் சில நாளாக காது கிழிய பேசி தோற்றவராகவும் நின்றார்.

சார்லஸ் காலையிலும் வரவில்லை.
மதியமும் ஆனது‌ அப்பொழுதும் வரவில்லை. சாரா அதேயிடத்திலிருந்து கொஞ்சமும் அசையாது வாசலை வெறித்தாள்.

மோஸஸ் ஏதோ கேட்டு நின்றதற்கும் பதிலில்லை. நிர்மலாகவே ‘அவளிடம் என்ன பேச்சு’ என்று இழுத்து சென்றார்.

மாலை மங்கிய நேரமும் வந்தது.
சாரா கதவையே பார்த்துக்கொண்டே இருந்தாள்.
மோஸஸ் மகனுக்கு அழைத்து பேச சொல்வியிருப்பாரோ என்னவோ, சார்லஸே அழைத்தான்.

சாரா ஆர்வமாக எடுத்து, “நீங்க… வீட்டுக்கு வரலையா சாரே” என்று கேட்டாள்.

“சாரா… ரொம்ப வேலை இருக்கு.
மூச்சு விட கூட நேரமில்லை.
டோன்ட் டிஸ்டர்ப் ப்ளீஸ் நான் வரலைன்னா கூட நீ ஒழுங்கா சாப்பிட்டு படுத்து தூங்கு. அம்மா ஏதாவது சண்டைப்போட்டா நீ ரியாக்ட் பண்ணாத.” என்றான்.

அவள் அமைதியாக இருந்தாள்.
அவன் பேசிவிட்டு போனை கத்தரித்து முடித்தான்.

அவள் பேசாமல் பேசவிடாமல் கத்தரிக்கவும், இதயத்தில் சோகம எதிரொலித்தது.

சில நிமிடங்கள் கழித்து,
நிர்மலா அருகே வந்தார்.

“என்ன… வேலையிருக்குன்னு சொன்னானா? இதே துகிரா வந்திருக்கானு சொல்லு. எந்த வேலையிருந்தாலும் ஓடி வந்து முன்ன நிற்பான். நான் சொல்றதை நம்பலைன்னா டெஸ்ட் பண்ணி பாரு” என்றார்.

ஏனோ சாராவின் இதயம் நின்றது. தன் கணவன் சார்லஸ் தனக்கு முன்னுரிமை தருகின்றானா? அல்லது துகிராவுக்கு முன்னுரிமை தருகின்றானா என்று அறிந்திட ஆவல் பிறந்தது.

இம்முறை துகிரா சேச்சி வந்திருக்காங்க. அத்தை சண்டையிடறாங்க’ என்று மட்டும்‌ அனுப்பினாள்.

சார்லஸ் அரை மணி நேரத்தில் வேகமாக சாரா முன்னே நின்றான்.

“துகிரா எங்கே?” என்று மூச்சு வாங்க கேட்டான்.

சாராவுக்கு முக்கிய வேலை டோண்ட் டிஸ்டர்ப் மீ என்று எல்லாம் பேசியவன் அரை மணி நேரத்தில் அவசரமாக வந்து நிற்பதை கண்டு தலை கிறுகிறுத்தது.

சாரா அவனை புருவம் இடுக்கி பார்த்தாள்.

நேற்று இரவு வராதவன்…
இன்று ஒரு பெயருக்காகவா ஓடிவந்தான் என்றதும் சாரா கண்களில் கண்ணீர் நிரம்பியது.

‘நிஜமாவே… நான் சார்லஸுக்கு மனைவி இல்ல… ஒரு பொறுப்பு தானா…?’ என்ற எண்ணம் தோன்ற அவள் மெதுவாக திரும்பி நடந்து சென்றாள்.

“சாரா… துகிரா எங்க?” என்று மீண்டும் கேட்க, “ரொம்ப ரொம்ப பிஸி. டோண்ட் டிஸ்டர்ப் என்று பறைஞ்சிட்டு, உங்க எக்ஸ் வந்திருப்பதா சொன்னதும் மின்னலாய் வந்து நிற்பது எதுக்கு சாரே. டாக்டர் சாருக்கு எக்ஸ் லவ்வர் மீது இன்னமும் நேசம். நான் என்டால் பிடிக்கில்லா? அதே?” என்று கேட்டாள்.

நிர்மலா கதவிடுக்கில் நின்று சிரிக்க, அன்னையின் வேலை இது என்று புரிந்த சார்லஸோ, “அப்படியில்லை சாரா.. இந்த வீட்ல நான் மெர்ஸி என்றால் துகிராவை மரியாதையா நடத்துவோம். அம்மா முகத்தில அடிச்ச மாதிரி பேசிடுவாங்க. அதனால தான் கர்ப்பிணியா இருக்கற துகிரா எந்த திட்டும் பேச்சும் வாங்கக்கூடாதுனு ஓடி வந்தேன். எனக்கு நீ தான் முக்கியம்” என்றான்.‌

சாராவோ மறுப்பாய் தலையசைத்து, “இல்லா.. நிங்களுக்கு நான் ஒரு பாரமாயி. நான் ஒரு எக்ஸ்ட்ரா பொறுப்பு. கர்த்தர் முன்னே விவாகம் செய்ததால் , நிங்கள் என்னை தள்ளி வைத்தால் அது ஒரு பாவமென, நிங்கள் என் மீது இரங்கம் காட்டில்லா. பட்சே நமக்குள் இந்த சிநேகம் பிரேமம் எதுவுமில்லா” என்று அழுதாள்.

அதே நேரம் ஒரு பெண்ணின் கால் பாதம் ஹாலில் வந்து நுழைவதை கவிழ்ந்திருந்த நிலையில் கண்டாள் சாரா.

-தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!