தேவி நந்தாவிடம் என்ன பேசணும் யோசிச்சு பேச மாட்டியா? நந்தா..
நீ பேசிய பேச்சினால் மொத்தமா கலங்கினது யாரு..?
மலரை பத்தி நம்ம யோசிக்க வேண்டியது இல்ல.. அவ எல்லாத்தையும் ஏத்துக்க பழகி வாழ்ந்துட்டு இருக்கா..
ஆனா அந்த பொண்ணு தியாவை பத்தி யோசிச்சியா சின்ன பொண்ணு டா.. என்றார்.
நந்தா அமைதியாக தலையை குனிந்து கொண்டான். அவனுக்கு சற்று வருத்தமாக தான் இருந்தது .
வளரும் பெண் பிள்ளையிடம் தன் தந்தையை பற்றிய தவறான எண்ணத்தை தோற்றி விட்டோம். இது சரி இல்லை என்று எண்ணினான்.
ஆனால் ,அவன் வேண்டும் என்று எதையும் செய்யவில்லையே ..
அங்கு கண்ணன் வார்த்தை விடவில்லை என்றால், நந்தா பேசியிருக்கப் போவதில்லை .
அமைதியாக விலகி தான் இருந்திருக்க போகிறான் .ஆனால் கண்ணன் பேச போய் அவனும் வார்த்தையை விட..
அது அதிகமாக பாதித்தது என்னவோ தியாவை தான் என்பதை உணர்ந்தான்.
ஆகையால், எதுவும் பேசாமல் அமைதியாக ஓரிடத்தில் போய் உட்கார்ந்து விட்டான்.
அவனுக்குமே வலிதான், ஒரு சில நிமிடம் தியாவை பற்றி யோசித்தான் .
எப்படி கள்ளம் கபடம் இல்லாமல் மான் குட்டி போல் துள்ளி குதித்து திரிந்தாள். இனி என்று யோசித்து விட்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தான்..
இங்கு தியாவிடம் மலர் எவ்வளவு பேச முயன்றார்.ஆனால், ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை.
தன் தாய் தன் மேல் கையை வைத்த உடன் அவரது கையை உதிரி விட்டு தன் தாயை முறைத்து விட்டு அமைதியாக இருந்தாள் .
கண்ணன் அப்பொழுதுதான் ,அவசரமாக வீட்டிற்கு வந்து கண்ணம்மா என்றார் .
அவரை பார்த்து நிறுத்துங்கள் போதும் என்பது போல் கையை தூக்கி காண்பித்து விட்டு தன் அம்மாவை பார்த்து ..
நான் தெரியாம தான் கேட்கிறேன். ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு கை குழந்தையோடு இருக்கிறார் என்று தெரிஞ்சும் எப்படி உன்னால இவரை கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது..
என்று கேட்க மலருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. தன் மகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
கண்ணன் தான் சந்தியா என்று கத்தினார். நான் உங்க கிட்ட பேசல என்னோட அம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன் .
சொல்லுங்க.. இவர் அவங்கள கல்யாணம் பண்ணிட்டாங்க சரி ,..
அவங்களுக்குள்ள ஏதோ சண்டை, ஏதோ சந்தேகப்பட்டார் .அதெல்லாம் நான் இப்போ பேச விரும்பல ..
ஆனா ,இது தான் சாக்குனு எப்படி நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க இவரை ..
இவரை நீங்க விரும்புனீங்க சரி ,இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று தெரிந்த உடனே உண்மையான நேசமா இருந்தா விலகி நின்னு இவங்க வாழ்றது பார்த்து சந்தோஷமா வாழ்த்தி தான் வந்து இருக்குமே தவிர ..
அண்ணன் எப்ப சாவன் திண்ண எப்ப காலியாகும் என்று ஒரு பழமொழி இருக்கே..அது கணக்கா அவங்க எப்ப விட்டுட்டு போவாங்க நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீங்களும் இருந்து இருக்கீங்க.. அப்படி தானே..என்று தியா கேட்ட அடுத்த நொடி..
கண்ணனின் ஐந்து விரல்களும் தனது அன்பு மகள், பாச மகள் சந்தியாவின் தாடையை பதம் பார்த்து இருந்தது.
மலர் தான் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். தியா அமைதியாக கண்ணனை பார்த்துக் கொண்டு இருந்தாள்
அதிர்ச்சியில் இருந்து வெளியில் வந்த மலர் தான் மாமா என்ன பண்ணிட்டு இருக்க மாமா ..
சின்ன புள்ள மாமா அவ..
அவ தான் என்ன பேசுறேன்னு தெரியாமா பேசுறானா ..
நீ அதுக்கு அவ மேல கை வைப்பியா ..இதுவரைக்கும் அவ மேல கை வச்சிருக்கியா?..
மாமா நான் சும்மா விளையாட்டுக்கு அவ மேல கை வச்சா கூட சண்டைக்கு வருவியே மாமா ..
பின்ன என்ன செய்ய சொல்ற என்ன..இப்படி பேசிட்டு நிக்குற ..
நானும் நம்ம புள்ள, செல்லம் கொடுத்தோம்னு அமைதியா இருந்தா..
என்ன பேசுறதுனு இல்லாம பேசிட்டு இருக்கு.. நான் செஞ்சதுக்கு,நான் பண்ணதுக்கு நீ எப்படி காரணம் ஆவ..
உன் மேல எல்லா பழியையும் தூக்கி போட்டு நின்னுட்டு இருக்கா..
என்ன வேணும் உனக்கு.. என்ன வேணும்னு கேட்கிறேன் ..
அவ வந்து என்ன கட்டிக்கிறேன்னு வந்து நிக்கல ..சரியா?
என்ன தெரியும் உனக்கு. அவளை பத்தி ?இவ்ளோ தான் இல்ல உனக்கு அவ..
இத்தனை வருஷமா உன்னோட அம்மா மலர பத்தி உனக்கு தெரிஞ்சுது அவ்ளோ தான் இல்ல என்று கேட்க அமைதியாகவே கண்ணனை பார்த்துக் கொண்டு நின்றாள் தியா.
வார்த்தையை விட்டால் அல்ல முடியாது தியா என்றார்..
தியா சிரித்துக் கொண்டே கைத்தட்டி கொண்டே எப்படி எப்படி வார்த்தையை விட்டால் அல்ல முடியாதா ?..
“இந்த பேச்சு 22 வருஷத்துக்கு முன்னாடி எங்க போச்சு? “என்ற உடன் கண்ணன் தனது மகள் தியாவை குற்ற உணர்வுடன் பார்த்தார் .
“வலிக்குதா ?”இந்த மாதிரி தான் அவங்களுக்கும் வலிச்சிருக்கும்னு யோசிச்சு இருந்து இருக்கீங்களா ?..
அதுவும் தப்பே செய்யாம ..உங்க பொண்டாட்டியை சொன்ன உடனே உங்களுக்கு கோவம் பொத்திட்டு வருது இல்ல ..
“அந்த ஆண்ட்டி என்ன பண்ணாங்க ?”அன்னைக்கு கூட என்ன ஒரு மனிதாபி மானத்தில தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க..
நான் யாரோட பொண்ணுனு கூட அப்போ அவங்களுக்கு தெரியவே தெரியாது ..
இங்க வந்ததுக்கப்புறம் தான் உங்களோட பொண்ணுனு கூட அவங்களுக்கு தெரியும் .
ஆனா ,அன்னைக்கு என்ன பேச்சு பேசுறீங்க.. நான் கூட வேற ஏதோ இருக்கும்னு நெனச்சேன்..
ஆனா.அது முழுக்க முழுக்க உங்க.சுயநலம் ..
உங்க மேல அத்தனை தப்பையும் வச்சிக்கிட்டு ..நீங்க அவங்கள தப்பான கோணத்தில் பேசிட்டு இருக்கீங்க ..
அவங்களுக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்னு யோசிச்சு இருக்கீங்களா..
எப்படி சொன்னீங்க ?எப்படி நீங்க அவங்க மேல சந்தேக பட்டீங்க..
“பக்கத்து வீட்ல இருந்தவங்க அவங்க மாசமா இருக்கும்போது பாத்துக்கிட்டதால அவங்களுக்கும் அவருக்கும் தப்பான தொடர்பு இருந்துச்சுனு சரியா?”
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ?”உங்களுக்கு தெரியாது .இதுவரைக்கும் உங்க ஆசை மலரு புள்ள உங்க கிட்ட சொல்லி இருக்க மாட்டாங்க ..
நான் சொல்றேன் கேட்டுக்கோங்க.. நீங்க ஆக்சிடென்ட் ஆகி அடி பட்டு ஹாஸ்பிடல்ல இருந்தீங்க இல்ல ..
அப்போ உங்கள ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனது யாரு அந்த ஆண்ட்டி தான்.
இது எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறீங்களா? உங்க பொண்டாட்டி என்கிட்டே சொல்லல ..
அவங்க ஹாஸ்பிடல்ல வச்சி உங்க பொண்டாட்டி கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் பார்த்தது.
அப்ப கூட ஏன் அம்மா நம்மகிட்ட மறைக்கிறாங்கனு யோசிச்சேன். உங்களுக்கு புடிக்கலன்றதுக்காக அம்மா இத மறைக்கிறாங்கனு யோசிச்சேன் ..
இப்போ தான அதுக்கான விளக்கம் என்னன்னு தெரியுது .அந்த இடத்துல கூட அவங்க மனிதாபி மானத்தில தான் உங்களை காப்பாத்தினாங்க ..
அது உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா கூட கேவலமா நீங்க அவங்களை பேசிட்டு தான் இருந்து இருப்பீங்க..
இத்தனை வருஷத்துல 22 வருஷம் ஆகுது .
இந்த 22 வருஷத்துல நீங்க தான் வேற ஒரு கல்யாணம் பண்ணி இருக்கீங்க ..
அதுக்கு சாட்சியா நான் இங்க. நின்னுட்டு இருக்கேன்.அனா நீங்க அவங்கள அவ்வளவு கேவலமா பேசினீங்க ஞாபகம் இருக்கா .
இந்த செகண்ட் வரைக்கும் அவங்க வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கல.. அதுக்காக இப்பயும் அவங்க உங்களை நினைச்சுட்டு இருக்காங்க அப்படின்னு நான் சொல்ல மாட்டேன் .
அது அவங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அவங்களோட சுய ஒழுக்கத்தை பத்தி பேசுற தகுதி உங்களுக்கும் இல்ல ..
உங்க பொண்டாட்டிக்கும் இல்லை .நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு ஆயிரம் காரணம் சொல்லுங்க என்னால அதை ஏத்துக்க முடியாது .
ஆனால் ,ஒருத்தவங்க வாழ்ந்துட்டு இருந்த வாழ்க்கையை அழிச்சிட்டு அந்த இடத்துல உங்க பொண்டாட்டி வந்து உட்கார்ந்து இருக்காங்க ..
அதுக்கு முழு முதற் காரணம் நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க.. நீங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சி நான் இங்க நின்னுட்டு இருக்கேன் ..
எனக்கு உண்மையாவே புரியல.அவங்கள சந்தேகப்படத் தெரிந்த உங்களுக்கு ..
நீங்க ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது நம்ம தெருவுல இருக்க மணி அங்கிள் தான் உங்க பொண்டாட்டியை ஹாஸ்பிடல் வர கூப்பிட்டு வந்து விட்டாங்க..
அதுக்காக இவங்களையும் தப்பான நோக்கத்தில பாப்பீங்களா ?என்று கேட்கும்பொழுதே மலர் அங்கே மண்டியிட்டு அழ செய்தார்.
கண்ணன் நாக்கை மடித்துக்கொண்டு தன் மகளிடம் சண்டைக்கு வந்தார் .
வலிக்கிதா..இல்லை தெரியாம கேட்கிறேன். இப்போ இவங்களை பேசும்போது இவ்வளவு வலிக்குது இல்ல..
“அப்போ அவங்க மேல நீங்க வச்ச நேசத்துக்கு பேர் என்ன ? “தெரியல எனக்கு ..
“அவங்கள கேட்க யாரும் இல்லனு நினைச்சீங்களோ ..என்னவோ ?”உங்களுக்கு தான் தெரியும்.
ஆனா ஒன்னு என்ன பொருத்தளவு இனி நீங்க இரண்டு பேரும் யாரோ ?என்று சொல்லிக் கொண்டு தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு உள்ளே அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டாள்..
மலர் அப்படியே ஒரு சில நொடி அங்கையே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தார்.
கண்ணன் மலரின் அருகில் சென்று தோளில் கை வைத்தார். மாமா என்ன விடு அமைதியா போயிடு..
நான் என்னடி பண்ண?நான் தெரிஞ்சு எதுவும் பண்லையே என்றார்.
நான் உன்கிட்ட எந்த விளக்கமும் கேட்கல மாமா ..
இப்போதைக்கு நான் இத பத்தி பேசுற நிலைமையிலும் இல்லை.
இப்போ நான் எத பேசினாலும் அது உனக்கு தப்பா தான் தெரியும் ..
தப்பா தான் போய் முடியும் ..
இப்போதைக்கு நான் இதை பத்தி பேசல கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு ..
அவளையும் அமைதியா விட்டுட்டு அவ கிட்ட வீணா வம்புக்கு போய்ட்டு நிக்காத ..
அவ பேசுறது எல்லாம் சரியா ?மலரு..
நான் நீயோ ,அவளோ பேசறது சரி தப்புன்னு சொல்லல மாமா இங்க..
ஒன்னு என்னையும்,உன்னையும் ஏன் ?அவங்க எல்லாத்தையும் விட அதிகமா பாதிக்கப்பட்டு நிற்கிறது தியா அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்..
அவளுக்கான நேரத்தை கொடு ..கொஞ்சம் அமைதியா இரு..
உன்னை நான் அவளை விட்டு விலகி இருக்க சொல்லல ..
ஆனா கொஞ்ச நாளைக்கு அமைதியா இருன்னு சொல்றேன்.
உன்னோட மக மாமா நீ தூக்கி வளர்த்தவ ..
எப்படி மனசு வந்து அவ மேல கை வச்ச.. அவ பேசுனதுல ஒன்னும் தப்பு இல்லையே ..
மலரு …
போதும் விடுங்க.. இந்த பேச்ச இதோட என்று விட்டு மலர் பின் கட்டுக்கு சென்று விட்டார்.
போகும் மலரையே பார்த்துக் கொண்டு கண்ணன் அழுகையுடன் நின்றார்.
தான் ஆசையாக தூக்கி வளர்த்த தன் செல்ல மகளை தானே அடித்து விட்டோமே என்ற வருத்தமும் , இத்தனை வருடங்களாக தனக்கு துணையாக நின்ற மலரே என்னிடம் பேசினால் நான் தவறாக எடுத்துக் கொள்வேன் என்று எண்ணுகிறாள் என்ற வருத்தமும் அவரை ஆட்டிப் படைத்தது.
இப்படித்தான் அன்று தேவிக்கும் வலி இருந்திருக்கும் என்பதை இந்த நொடி கூட கண்ணன் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .
இவர் உணர வேண்டும் என்று தேவி கூட நினைக்க மாட்டார்.