புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

வெண்மேகமாய் கலைந்ததே-3

அத்தியாயம்-3

சர்வானந்தன் நம்பிக்கையாய் பிருந்தாவை கைபிடித்து அழைத்து வர, அதற்கு நேர் மாறாக அவன் தந்தையோ “அங்கே நில்லுடா” என்று அரற்றினார்.
வாசலில் அடி எடுத்து வைக்கும் பிருந்தாவின் வருகை தடைப்பட்டது.

“#யாரைக் கேட்டு இவள் கழுத்துல தாலி கட்டின?” என்று கோபமாய் கர்ஜித்தார் சுதாகர்.

“யாரை கேக்கணும் பா?அம்மாவோட சொந்த அண்ணன் பொண்ணு எனக்கு கட்டிக்கிற உரிமையிருக்கு. நானும் அவளும் விரும்புறோம்” என்றான் சர்வானந்தன்.

“என்னது இவளோட அண்ணன் பொண்ணா? உரிமையிருக்கா? அந்த உரிமை வெங்காயம் எல்லாம் எங்க சண்டையில் எப்பவோ போயிடுச்சு. இப்ப என்னோட எதிரி வீட்டு பொண்ணுடா. அப்படியிருக்க, இவளை எப்படி கல்யாணம் செய்த? முதல்ல தாலியை அறுத்து எறிந்து அவளை இந்த வீட்ல விட்டு வெளியே அனுப்பு” என்று சுதாகர் பேச, யோகலட்சுமி நெஞ்சை பிடித்தபடி அதிர்ச்சியானார்.
பிருந்தாவிற்கு தாலிக் கட்டிய சில நொடிகளிலேயே ‘தாலி அறுத்தெறிந்த விடு என்ற பேச்சு கசப்பை தந்தது. அவளும் தன் தாலிக்கொடியை பிடித்தபடி கணவரை ஏறிட்டாள்.

சர்வானந்தோ “அப்பா என்ன பேசுறீங்க வீட்டுக்கு பெரியவரா நிதானமா பேசுங்க” என்றான்.

அவரோ தன் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதற்கு இணங்க “இங்க பாருடா உங்க அம்மாவோட அண்ணன் விஷயத்தை பொறுத்த வரைக்கும் நிதானம் என்பது எனக்கு கிடையாது. அவங்க விஷயம் எதுவா இருந்தாலும் இந்த வீட்டு வாசப்படியில் கூட வரக்கூடாது நினைக்கிறேன் நான்.
உனக்கு நீ தாலி கட்டுன பொண்ணு தான் முக்கியமா இருந்தா இந்த வீட்டுக்கு படியில நீயும் வராதே, வெளியே போ எனக்கு ரெண்டு பசங்க இருந்தாங்க. ஒருத்தன் இறந்துட்டான்னு நான் முடிவு கட்டிக்கிறேன்” என்றார்.

இத்தனை காலமாய் தன் தந்தை தன் மீதும் தன் தம்பி மீதும் அளவற்ற பாசம் வைத்திருப்பவர் என்ற நம்பிக்கை ஒரு நொடியில் சரிந்தது. தந்தை மாமாவின் மீது கொண்ட வெறுப்பால் பெற்ற பிள்ளையை கூட இழக்க தயாரா என்று திகைத்தான்.

காவல் அதிகாரிக்கான கோபம் பன்மடங்காய் ஏற, தன்னை தணித்துக் கொண்டு ஒரு மகனாய் நிதானமாய் தந்தையிடம் பேசினான்.
“இங்க பாருங்க மத்தவங்களுக்காக என்ன பாக்காதீங்க, நான் உங்க பையன் தானே? என்னை ஏத்துப்பீங்களா மாட்டீங்களா? இன்னிக்கு எனக்கு கல்யாணம் சரியோ தவறோ, அவ கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு வந்து இருக்கேன் என்ன இந்த வீட்டுக்குள்ள ஏத்துக்கிட்டீங்கன்னா உங்களுக்கு மகனா நான் இருப்பேன். இல்ல வெளியே போகணும்னு நீங்க சொன்னீங்கன்னா இதோட இந்த வீட்டு படியே நான் ஏற மாட்டேன்.” என்று தந்தைக்கு சளைக்காதவன் போல பதில் தந்தான் சர்வானந்தன்.

தாயின் யோகலட்சுமி கணவரையும் மகளையும் பார்வையிட்ட அஞ்சினார்.

கணவரும் மகனும் வார்த்தை விட்டால் அதன் படி நடக்கும் ஆட்கள்.

கணவர் இனி பெரிய மகனை வீட்டில் சேர்க்க மாட்டாரா? என்ற கவலை வந்தால், மறுபுறம் பெற்றெடுத்தவனும் வீட்டிற்கு காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று வார்த்தை வீசுகின்றானே‌.

கணவரிடம் “என்னங்க அவன் நம்ம பையங்க. என் அண்ணன் மகளை தானே கட்டியிருக்கான்” என்றதும், ரௌவுத்திரமாக அது தாண்டி எனக்கு கோபம் கோபமா வருது. ரோட்ல போற பொண்ண கல்யாணம் பண்ணி இருந்தா கூட சந்தோஷப்பட்டு இருப்பேன். வாம்மா மகாலட்சுமின்னு ஆரத்தி காட்டி உள்ள வீட்டுக்கு வர வச்சிருப்பேன். ஆனா போயும் போயும் உங்க அண்ணன் பொண்ணு கல்யாணம் பண்ணி இருக்கான் பாரு. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல.

இன்னும் என்னடா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க, நீ எவ்ளோ நேரம் இங்க நின்னாலும், உன்னை விட்டுக்குள்ள அனுப்புறதா எனக்கு உடன்பாடு இல்லை மான ரோஷம் இருந்தா இப்பவே வெளியே போ” என்றார் சுதாகர்.

அடுத்த நொடி இளம் காளை அவன் சும்மா இருப்பானா பிருந்தாவின் கையை பற்றி தரதரவென இழுத்துச் சென்றான்.

தன் இரு சக்கர வண்டியின் அருகே அவளை நிறுத்திவிட்டு “ஒரு நிமிஷம் இங்கே இரு” என்றவன் வீட்டுக்குள் அடியெடுக்க வந்தான்.

“அம்மா என்னோட திங்க்ஸ் டிரஸ் நான் எடுத்துக்கிட்டு ரெண்டே செகண்ட்ல வெளிய வந்துடறேன் உள்ள போலாமா?” என்று அனுமதி வேண்டி நின்றான்.

யோகலட்சுமிக்கு விழியில் இருந்து கண்ணீர் தாரையாய் வழிந்தது. வீட்டின் மூத்த மகன் இப்படியா தன் வீட்டுக்குள் செல்லவே அனுமதி கேட்டு நிற்க வேண்டும் என்ற கையாலாகாத தனத்தில் கணவனை பார்வையிட்டார்.

சுதாகரோ, “என்ன பண்ண எடுத்துட்டு போ எங்களுக்கு இங்க உன் உடுப்பு இருந்தாலும் பிச்சைக்காரர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். அதுக்கு தாராளமா நீயே எடுத்துட்டு போகலாம் அதுக்காக வேணும்னா உன் காலடி என் வீட்டுக்குள் படலாம்.” என்று இறுமாப்பாய் பேசினார்.

அடுத்த நிமிடம் நெஞ்சு விம்ம சார் ஆனந்தன் வீட்டுக்குள் சென்று தன் உடைகளில் காக்கி உடைகளும், தினசரி உபயோகப்படுத்தும் சிலர் பொருட்களையும் அள்ளி தன் வேலையை போட்டு திணித்து எடுத்துச் சென்றான்.

பிருந்தாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றி தன் தாய் தந்தை திரும்பி பார்க்காமல் உறுமிக் கொண்டு சென்றான்.

யோகலட்சுமியும் தன் கணவரும் பையனும் இருவருக்குள்ளும் மாட்டிக் கொண்டு தவித்து தூணில் சாய்ந்து அழுதார்.

சுதாகர் தன் தோளில் இருந்த துண்டை எடுத்து உதறிவிட்டு அறைக்குள் முடங்கினார்.

பைக்கில் அசுரத்தனமாக சென்ற சர்வானந்தனோ, தன் தோழன் வீட்டில் பிருந்தாவை நிறுத்திவிட்டு உடனடியாக தங்க வீட்டை பார்த்தான்.

காவலதிகாரியாக இருப்பதாலோ என்னவோ உடனடியாக வீடு கிடைத்தது.
ஏடிஎம் மில் பணத்தை எடுத்து நீட்டினான். பிருந்தா விடமும் கையில் பணத்தை கொடுத்தான். “வீட்டுக்கு தேவையானது பக்கத்துல இருக்கிற கடையில சொல்லி டோர் டெலிவரி ஏற்பாடு பண்ணிடுறேன். கவலைப்படாம இன்றிலிருந்து நாம நம்ம வாழ்க்கையை பார்க்கிறோம்.

இனி உங்க வீட்டுலயிருந்து அப்பா அம்மா என்று இந்த வாசலில் அடியெடுதாது வரக்கூடாது. அதேபோல எங்க அப்பா அம்மாவும் இந்த வாசல் தேடி வரவிடமாட்டேன்.

இனி நமக்கான வாழ்க்கையை நம்ம வாழ போறோம். பிருந்தா அழாம கொஞ்சம் சிரி டி” என்றான்.

பிருந்தாவிற்கோ லேசான கலக்கம் பிறந்தது. ஆனால் தந்தை போல தாய் அல்ல எப்படியும் தன் நலத்தை அறிய அலைபேசி வழியாக நலம் விசாரிப்பார்கள் என்று கையில் போனை வைத்து சர்வானந்தனிடம் தலையாட்டினாள். 

“சரி எனக்கு முக்கியமான கேஸ் ஒன்னு இருக்கு நான் போகணும் நீ சடனா போன் பண்ணவும் தான் வந்துட்டேன். நைட் சாப்பாடு ஏதாவது வாங்கிட்டு வந்துடறேன். கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கலாம் இப்ப எது முக்கியமோ அதை மட்டும் கான்ஸ்டபிள் கிட்ட சொல்லி அனுப்பி விடறேன்” என்றான் சர்வானந்தன்.

கண்ணீரைத் துடைத்தபடி சர்வானந்தனுக்கு தலையாட்ட அவன் அவளது கன்னங்களை பிடித்து நெற்றியில் முட்டி “வர்றேன் பொண்டாட்டி” என்றான்.

பொண்டாட்டி என்ற வார்த்தையின் இனிமை பிருந்தாவை தாக்க அவளது அழுகை எல்லாம் குறைந்து, முத்து பல்வரிசை தெரிய புன்முறுவல் புரிந்தாள்.

சர்வானந்தன் அவசரமாய் தன் பணிக்கு சென்றான். அவனுக்கு முதல் மனைவி அவன் கடமை தான். அதனால் மற்றவை இரவில் வந்து பிருந்தாவிடம் பேசிடலாமென விரைந்தான்.

சர்வானந்தன் தாயார் யோகலட்சுமியோ, கணவர் வெளியே சென்றதும் தன் போன எடுத்துக் கொண்டு தன் சின்ன மகன் விஹானிடம் அழைத்தார்.

கண்ணீர் வடிய புலம்பி தீர்த்து சர்வானந்தனின் திருமண செய்தியை விஹானிடம் அறிவித்தார். 

விஹானோ “சரி மா அழாதே. உன் அண்ணன் பொண்ணை தானே கல்யாணம் பண்ணி வச்சிருக்கான்
சந்தோஷப்பட்டுக்கோங்கம்மா. என்னைக்காவது ஒரு நாள் அண்ணனுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அப்பா தன்னால சரியாயிடுவாரு.
அதுவரை கொஞ்சம் நிதானமா இருங்க எல்லாம் சரியாயிடும். என்று தாயுக்கு ஆதரவாய் ஆறுதல் உரைத்தான்.

என்னவோடா அந்த ஒரு நல்ல நாளுக்கு தான் காத்துகிட்டு இருக்கேன்.” என்று யோகலட்சுமியும் உரைத்தார்.

பின்னர் வெளியூரில் இருக்கும் தன் சின்ன மகன் விஹானிடம் நலம் விசாரித்து உடலை கவனித்துக் கொள்ளுமாறு கூறி அலைபேசி தொடர்பை துண்டித்தார்.


மதுரை மாநகரம்

நிரஞ்சன் காணாமல் போனதாக அங்கிருக்கும் லோக்கல் தனியார் சேனலில் காணாமல் போன அறிவிப்பு போட்டு அவன் புகைப்படம் வெளியானது.

சிறு பெண் கவிநிலாவோ தன் அண்ணன் புகைப்படம் டிவியில் வர அன்னையை நாடினாள். திர்வீட்டு லட்சுமி தான் கவிநிலாவை அரவணைத்து இங்க இருடி. அங்க உன்‌ அம்மா அழுதுட்டு இருக்கா. நாலுயிடம் போய் பார்த்து கேட்டும் இல்லையா.” என்று உட்கார வைத்தார்.

ஜெய்சங்கரும் சிவகாமியும் போலீஸில் புகைப்படம் கொடுத்து அறிந்தவர் தெரிந்தவரிடம் விசாரித்து துவண்டு நின்றனர்.

நிரஞ்சனோ மதுரை பேருந்து நிலையத்தில் சென்னைக்கு செல்லும் பேருந்தில் பின் பக்கம் இருந்த ஏணியில் ஏறி மேலே படுத்துக்கொண்டவன், சென்னைக்கு வந்திறங்கி கண்ணை கசக்கினான்.

அடிக்கடி வீட்டு ஓட்டின் மேலே ஏறிச் சென்று படுத்துக் கொள்ளும் பழக்கம் இருப்பதால், பேருந்தின் மேலே ஏறி படுத்துக்கொண்டது அவனுக்கு பயம் இல்லை. ஆனால் இருட்டு என்றால் சிறுஅச்சம் இருக்கும் குழந்தைக்கு.

நிரஞ்சனுக்கு டிக்கெட் எடுக்காமல் நடத்துனர் பேருந்தில் ஏற்றமாட்டாரென, ஏணியில் ஏறி படுத்துக் கொண்டான்.

லேசான விசும்பலோடு தந்தை அடித்ததால் அக்கவலையில் தானாக உறங்கி விட்டான். சென்னை பேருந்து நிலையத்தில் வண்டி நிற்பதால் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, பயத்தில் நெஞ்சில் கை வைத்து மெதுவாக ஏணியிலிருந்து இறங்கினான்.

அங்கிருக்கும் சில டீ குடிக்கும் மனிதர்கள் பார்வையில் பட்டவுடன், ‘என்ன பண்ற? பஸ்ல எல்லாம் ஏறாத’ என்ற சத்தத்தில் கீழே விழுந்து எழுந்து ஓடி, அவ்விடத்திலிருந்து மறைந்து போனான் நிரஞ்சன்.

தன்னை தேடி தன் தாய் தந்தையர் கதறுவார்கள் என்பதை அந்த பிஞ்சில் உள்ளம் நினைக்க மறந்தது. எப்பொழுதும் தன்னை திட்டி, அடிப்பதால் அவர்களுக்கு தான் இல்லை என்றால் நல்லதென எண்ணுவார்கள் என்று மடத்தனமாகவும் எண்ணிக் கொண்டான்.

இன்னும் சற்று நேரத்தில் பசி என்னும் அரக்கன் அவனை ஆட்கொள்ளும் போது தான் தன் பெற்றவரை எண்ணுவானோ என்னவோ அதுவரை இந்த சிங்காரச் சென்னையை அவன் சின்னசிறு கண்கள் ஆச்சரியமாய் அளவிட்டுக் கொண்டிருந்தது

-தொடரும்.

8 thoughts on “வெண்மேகமாய் கலைந்ததே-3”

  1. ஓ மை காட்..! இப்படித்தான் அப்பா திட்டினாங்க, அம்மா திட்டினாங்கன்னு கோவிச்சுக்கிட்டு, அவசரப்பட்டு வீட்டை விட்டு வெளியில வந்துட்டு, பின்னாடி தப்பான விஷயங்கள்ல, தப்பான ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு தவிக்க வேண்டியது.

  2. Good sarva una vitumbunavala mrg pannikitta veetla ethirthalum avala vidama veedu parthu iruka vachita nalla padiya life lead pannanum . Niranjan avasara pattu ippadi bus eri vanthuta

  3. நிறைய குழந்தைகளின் மனநிலை நிரஞ்சன மாதிரி தான் இருக்கு பெத்தவங்க அடிச்சு புத்திமதி சொன்னா திட்டுனா அவங்களுக்கு இந்த குழந்தைகளை பிடிக்காது அப்படிங்கிற முடிவுக்கு வந்துடுறாங்க. எதுக்காக கண்டிக்கிறாங்க தன்னோட பிள்ளைகள் நல்லபடியா வளர வேண்டும் எந்த தப்பும் செய்யக்கூடாது அப்படிங்கறதுக்கு தான் என்பது புரிய மாட்டேங்குது.

  4. குழந்தைகளுக்கு பெற்றோர் கேட்டது எல்லாமே வாங்கி கூடுக்கறதனால கொஞ்சம் திட்டினாலே அவங்களுக்கு தங்களை பிடிக்கல சொல்லி இந்த மாதிரி விட்டவிட்டு ஓடி போயிடறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!